தொடரும் குரல்...





சிறு வயதினலாய் பொம்மை  வைத்து  
விளையாட விரும்பினேன்....
உடனே நிறைவேறியது...ஆசை தீரும்  மட்டும் 
படிக்க விரும்பினேன்....
பல பட்டங்கள் என் பெயருக்கு பின்னே.
அன்பான, அருமையான, கம்பீரமான,
துணை வேண்டும் என்றேன்,
தேடி கண்டு, நிறைவேற்றினர் பெற்றோர்!


இருவரும் இணைந்தோம் மணவாழ்வில், 
ஒன்றாய் பறந்தோம், பறவைகளாய் ....
ஆடி களித்தோம், மற்றவர் பொறாமைபட 
கடவுள் என்னை மட்டும் அதிகமாய் 
ஆசிர்வதித்ததாய், ஆனந்த கூத்தாடினேன்....
நாட்கள்  நகர்ந்து மாதங்களாயின...!
மாதங்கள், வருடங்களாயின....!


என்னிடம் எதையோ தேடின
என் உறவினர்களின் விழிகள்...
தாமதமாகத்தான் உணர்ந்தேன் ,
நான் நானாகவே இருக்கிறேன் என்று...!!
என் கைகள் அனிச்சையாக என் 
வயிற்றை தடவின ஏன் இல்லை என்று...??
என்னை ஆச்சரியத்துடம் அன்று நோக்கிய 
உறவினர்களின் விழிகளில் இன்று 
ஏளன பார்வை......


அதை தவிர்க்க வீட்டுக்குள் சிறை 
வைத்தேன் என்னை,  துணையின் சமாதானம் 
காதில் விழுவதாய் இல்லை 
இப்போதெல்லாம்.... முழுதாய்  என்னை 
கடவுள் ஆசிர்வதிக்க தவறியது ஏன்?
பெற்றோர் வைத்த பெயர், மறைந்து 
வேறு  ஒரு பெயரில் அழைக்கின்றனர்..!


பிற பெண்கள் சாதாரணமாய் 
எதிர்கொள்வதை, நான் ஆவலாய் 
எதிர்பார்கிறேன்...,  ஒவ்வொரு மாதமும்.... 
எதிர்பார்த்து ஏமாறுகிறேன்....
ஏமாற்றி கொண்டே இருக்கிறது 
காலமும்.... 


கொஞ்ச நாளாய் தொடர்ந்து 
ஒரு குரல்....! 
என் காதில் ஒலித்துக்கொண்டே 
இருக்கிறது......!


"மலடியே மகிழ்ந்து பாடு,  நீ பல பிள்ளைகளின் தாய்....!!" 








9 comments:

//"மலடியே மகிழ்ந்து பாடு, நீ பல பிள்ளைகளின் தாய்....!!" ///


ஊருக்கே தாய் என்பது பெருமையான விஷயம்.. சமுதாயம் மாற வேண்டும் இந்த விஷயத்தில். இன்னும் நம் மக்கள் இந்த விஷயத்தில் மாறவில்லை என்பது சோகமான விஷயம்

 

//மலடியே மகிழ்ந்து பாடு, நீ பல பிள்ளைகளின் தாய்....!!" //

nice one...

 

நெஞ்சம் கனத்து போய்விட்டது கவிதையினை வாசித்து முடிக்கும் போது......குழந்தையில்லாதவர்களின் மனோ நிலையை துல்லியமாக எடுத்சொல்லி ஒரு வித சோகத்தோடு கவிதை ஏக்கத்துடன் முடிகிறது...

பெண்களே இப்படி பெண்களை குறை சொல்வது தான் வருத்தமான திருத்தப்பட வேண்டிய விசயம்.....

வாழ்த்துக்கள் அக்கா... !

 

அருமையாகவுள்ளது பாராட்டுக்கள் சகோதரி

 

LK...

//இன்னும் நம் மக்கள் இந்த விஷயத்தில் மாறவில்லை என்பது சோகமான விஷயம்//

அதை எண்ணித்தான் இந்த கவிதையே எழுதினேன்... நன்றி

 

கோவை குமரன்...

நன்றி.

 

சௌந்தர்...

//குழந்தையில்லாதவர்களின் மனோ நிலையை துல்லியமாக எடுத்சொல்லி ஒரு வித சோகத்தோடு கவிதை ஏக்கத்துடன் முடிகிறது...//

கவிதையை ஆழமாக உணர்ந்து படித்து புரிந்து கொண்டதுக்கு நன்றி சௌந்தர்.

மாற்றங்கள் வரணும்பா...

 

மகாதேவன்.V.K...

வருகைக்கும் , பாராட்டுக்கும் நன்றி.

 

கடைசி வரி கலங்கடித்தது.நெல்லையிலிருந்து ஒரு நல்ல கவிதை என்கிற போது இரட்டை மகிழ்ச்சி.[நான் நெல்லைதான்]