Posted by
Kousalya Raj
comments (4)
தேடி அலைந்தேன்
ஒவ்வொரு இடமாக...
பின் தொடர்ந்த என் மீது
வண்ணம் உதிர்த்து வானில் பறந்தது
ஒரு வண்ணத்துபூச்சி...!
அருகில் சென்ற என் மீது
பழுத்த இலைகளை வீசி எறிந்தது
காற்றுக்கு தலை அசைத்த ஒரு மரம்...!
விரைந்து நெருங்கிய என் மீது
சாம்பலை அள்ளி பூசியது
கனல் கக்கிய ஒரு எரிமலை...!
நதி கரையில் காலடி தடம்
கண்டுத் தொடர்ந்தேன்
தடம் நதிக்குள் சென்று முடிந்திருந்தது...
ஓடும் நீரில் முகம் தெரிய உற்று நோக்கினேன்
முகம் நழுவத் தொடங்கியது...
ஐயோவென்று நதியுடன் தொடர்ந்து ஓடினேன்...
அது என்னை ஒரு பாலை வனத்தில்
கொண்டுபோய் சேர்த்தது...
மணலை அள்ளி எண்ணி பார்த்தேன்
அங்கே உன் வருகை பதிவு
எண்ண முடியாத அளவில் இருந்தது...
களைத்து
வீடு திரும்பி
பூட்டை விடுவித்து
என் அறை கதவு திறந்து
உள்ளே சென்றேன்...
அங்கே
பஞ்ச பூதங்கள் மீதேறி
அமர்ந்திருந்தாய்
வெற்றிக் களிப்புடன்...!!
படம் -நன்றி கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (3)
விவாதங்களில்
விட்டுக்கொடுப்பதில்
முந்திக் கொள்வாய்
என் வார்த்தைகள்
உன்னை வதைப்பதை மறைத்து...
சமயங்களில்
வெட்கப்பட வைக்கிறது
அளவில்லா உன் அக்கறை
மறுபடி காய்ச்சல் வரும் நாளை
எதிர்பார்க்கிறது மனது...
பலமுறை உன் பேச்சை
அசட்டை செய்திருக்கிறேன்
'அடி அசடே' கன்னம் கிள்ளும்
விரல்கள் சொல்லும்
என் மீதான உன் அன்பை...
உன் அழைப்புகளை
தவிர்க்க முயலும்
ஒவ்வொரு முறையும்
விழிகளால் இறைஞ்சும் உன்னை
மறுதலித்தாலும்
மனமறியும்
இறுதிவரை
எனது நிழல் நீ என்பதை...!
விலகவும்
விலக்கவும்
விதிமுறை ஏது
விளக்கம் கொடுத்தாய்
விளக்கம் பெற்றும்
விளங்காமல் நிற்க்கிறேன்...
ஒரு காற்றாய்
எப்பொழுதும் சூழ்ந்திருக்கும்
உனக்காக
இதுவரை நான் ஒன்றும் செய்ததில்லை
சுவாசிப்பதை தவிர...!
படம்-நன்றி கூகுள்
Labels:
கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (6)
நேசம் தவிர
வேறு சில தேவைகள்
சில சரிபடுத்தல்கள்
அவசியமாகி விட்டது
இப்போது...
உனது முப்பொழுதும் இன்பமாய்
கழியவேண்டுமென்று
உன் மேல் படிந்திருந்த
நரக நிழலை
வழித்தெடுத்து எறிந்துவிட்டேன்...
உனது பயணம் சுகமாக
இருக்கவேண்டுமென்று
வழியிலிருந்து எடுத்து
அப்புறப் படுத்திவிட்டேன்
முள் என்னை...
உன்னை துன்புறுத்தும்
நினைவு மிச்சங்களை
மொத்தமாய் தீயிலிட்டு
எரித்துவிடுவேன்
இன்னும் சற்று நேரத்தில்...
யாவும் முடிந்துவிடும் !
இனி
தினமும் நீ
விழித்தெழுந்து பார்க்கையில்
உன் வீட்டு பூந்தொட்டியில்
ரோஜாக்கள் மட்டும் பூத்திருக்கும் !
முட்களை எடுத்து
வந்துவிட்டேன் கையோடு...!!
படம் - நன்றி கூகுள்
Labels:
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (4)
கண்ணாமூச்சி விளையாடும்
சிறுபிள்ளையாய் ஓடி
ஒளிந்து கொள்ளும் உன்னை
ஒவ்வொரு அறையாய்
தேடித் தேடி
களைத்துப் போகும் என்னை
ஓரமாய் நின்று
மௌனமாய் ரசிப்பதே
உன் வேலையாகி போனது !
இதோ
இன்றும்
தேடி ஓடுகிறேன்
ஓடிக்கொண்டே இருக்கிறேன்
களைத்து சோர்ந்து
வாசலோரம் சாய்ந்து அமருகையில்
மடியில் வந்து விழுகின்றன
'எடுத்துக் கொள்ளேன்' என்று
இந்த வார்த்தைகளும்
நீயும் ஒன்று
தேடவைப்பதில்...!!
படம் -நன்றி கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (10)
தேவைப்படுகிறது
ஒரு கனத்த மௌனம்
மௌன நிலையில்
ஒன்றையொன்று
உணர்ந்துக்கொள்ளும்
அந்த அற்புத கணம்
என்று வாய்க்குமோ...?!
அவ்வேளையில்
உன் முன்னே
ஒரு வெற்றுத்தாள் போல்
வந்து நிற்கிறேன்
உனது சங்கல்பம்
அப்போதே
என்னுள் எழுதப்படட்டும்
உன்னால்...!
அத்தருணத்தில்
அதுவரையில் இருந்த எனது கற்பனைகளை
கலைத்துப்போடு...
இரவின் தனிமை கட்டிய
கனவுக் கோட்டைகளைத் தகர்த்தெறி...
சேர்த்து வைத்திருந்த
மாயக்கூடுகளை உடைத்துப் போடு...
பழைய எண்ணக்கட்டுகளை
அவிழ்த்து விடு உடன் அழித்துவிடு ...
உணர்ச்சிப் பெருக்குகளை
கட்டுப்படுத்தி கடிவாளம் இடு...
கற்பிதங்கள் படிப்பினைகளை
கரைத்துவிடுவது அவசியமெனில்
கரைத்துவிடு...!
என்னுள் நீ நிறைய
தடையாய் இருக்கும்
அத்தனையும்
இல்லாமல் போகட்டும் !
உன்னை அறிந்து
எல்லாம் அறிந்தவளாக மாற
உன் பாதத்தில்
என்னை சமர்ப்பித்து
பனிமலரால் குளிர்விக்கிறேன்
உன்னை...!!
படம் - நன்றி கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (5)
இதுவரை
அவன் எனக்காக
ஒன்றும் செய்ததில்லை
பரவாயில்லை
அவனுக்கும் சேர்த்து
நான் காதலிக்கிறேன்
* * *
நேரம் போவது தெரியாமல்
அவனுடன் பேசிகொண்டிருக்கையில்
எனக்கு ஒரே ஒரு கவலை
இந்த நேரம் ஏன் இப்படி ஓடுகிறது?
* * *
எனக்காக அவன்
பேசியதை விட
என்னிடம் பேசியதில் தான்
உணர்கிறேன் காதலை !!
* * *
'என் கவிதையை படித்துவிட்டு
தூங்கச் சென்றால்
தூங்கமாட்டாய் நீ'
என்றான் ஒருநாள்
என்னமோ தினமும்
நான் தூங்குவது மாதிரி...!
* * *
அவனிடம் பேச இயலாதபோது
எதிர்ப்படும் அத்தனை பேரிடமும்
பேசுகிறேன்
அவனைப் பற்றி மட்டுமே...!
* * *
யார் அவன்
கேள்விக்கு
பதில் சொல்ல முடிவதில்லை
எல்லோரிடமும்...
எங்கும் தேடாதீர்கள்
என் கவிதைகளில் இருக்கிறான்
என் 'அவன்' !
படம்-நன்றி கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (14)
நீ சிதறிய வார்த்தைகளை
நேற்றிரவில்
கனவுகளில் சேகரித்து
விடியலில்
விதைத்துவிட்டேன்
இன்னும் ஆழமாய்
நெஞ்சில்...
நெருப்பால் அணைத்தாய்
பனியென மடி அள்ளிச் சேர்க்க
சுடும் வரை உரைக்கவில்லை
சுட்ட பின்போ
சுட வைத்தவன் நீ தானே
ரசித்து சுகித்தேன் தீயில்...
நேற்று சாம்பாலாகி போன
என் உடலை
உன் நினைவு நீரூற்றி
உயிர்ப்பிக்க
வைத்துவிட்டேன்
உனக்காக இன்று...
மறுபடி
என்றாவது ஒருநாள்
உனக்கு தேவைப்படலாம்
எரித்து விளையாட...!
* * * * *
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (5)
கொட்டித்தீர்த்தது
அடை மழை
உன் வருகையால் இன்று...
வாசலில் உன் கால்தடம்
ஒளிர்கிறது
மாக்கோலம் இன்று...
தோட்டத்து மின்மினி பூச்சி
கண்சிமிட்டி தெரிவிக்கிறது
வானவில் பிரியங்களை இன்று...
சில்மிஷங்களும் அவஸ்தைகளுமாய்
கழிந்த மாலை பொழுது
மேலும் ரம்மியமானது இன்று...
'அழகனா அவன்?'
கேலிபேசிய கொன்றைப் பூக்கள்
உன் மலர் முகம் கண்டு
வெட்கி இதழ்கள் உதிர்த்து
உன்னை முத்தமிட துடிப்பதை ரசித்து
உன் முகம் மறைக்கிறேன்...
நொடிக்கொரு முறை நம் கைகள்
கோர்த்து பிரித்து அழுத்தி
உறவாடியதை நீயும் ரசித்தாயா என்ன?
விடுவிக்கவே இல்லை உன் விரல்களை...
கவிதைகள் பல
கதைகள் பல
ஆசைகள் பல
ஏக்கங்கள் பல
நேரில் சொல்ல ஒத்திகை பல
அத்தனையும் எங்கே
ஓடி ஒளிந்ததோ...
வினாத்தாள் பார்த்து
விடை மறந்த மாணவியாய்
முழித்துக் கொண்டிருக்கிறேன்!
மனதினுள் எழுதி அழித்து
எழுதி அழித்து
நான் தவித்து தடுமாறுவதை
ஓரவிழிகளால் ஏனடா பார்க்கிறாய்
மொத்தமாய் மறந்து போகிறதே !
என் மன ஓட்டம் அறிந்தும்
"ம் அப்புறம்,வேற என்ன செய்திகள்?"
ராட்சஸா! எங்கேயடா கற்றாய்
இப்படி என்னை சீண்டி சிதைக்க
செல்லச்சினம் ஒன்று தோன்ற
"ம்...ஒண்ணுமில்ல"
"அப்ப ஏதோ இருக்கு, என்ன அது சொல்...!?"
ஒத்திகையின்றி
காவியம் ஒன்றை
அரங்கேற்றுகிறாய் மெல்ல...
படங்கள் -நன்றி கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (3)
நீ
இல்லாத
இரவுகளும்
இதமாகவே
இருக்கின்றன...
உன்னைவிடவும்
இறுக்கமாக
அணைத்திருக்கின்றன
உன் நினைவுகள்!
* * *
எனக்குள்
ஓடி பிடித்து
விளையாடுகின்றன
'பத்ரமா பாத்துக்கோ' வென
நீ ஒப்படைத்து சென்ற
உன் நினைவுகள்...
விழுந்து
அடிபடாமல்
பாதுகாப்பதிலேயே
முப்பொழுதும்
முடிந்துவிடுகிறது...
* * *
ஒன்றும் செய்யவிடாமல்
பாடாய் படுத்தியெடுக்கும்
உன் நினைவுகளால்
நினைவிழந்து போகிறேன் நான் !
* * *
வரும்வரை வைத்துக் கொள்...
உனக்கென்ன
கொடுத்துவிட்டு
போய்விட்டாய்...
நானல்லவா மாட்டிக்கொண்டு
முழிக்கிறேன்
நினைவுக்கும் கனவுக்கும் நடுவில்...
ஒன்று
தூங்கவிடுவதில்லை !
மற்றொன்று
தூங்கினாலும் விடுவதில்லை !
* * *
நீ வர தாமதித்தால்
நிலைமை இங்கே
மிக மோசமாகிவிடும்...
உன்னை விட
அருமையாய் காதலிக்கின்றன
உன் நினைவுகள் !
* * *
உன் நினைவுகளில்
மூழ்கித் திளைப்பதே
காதல் என்பதாகிப்
போனதெனக்கு!
* * *
படங்கள் -நன்றி கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்