Posted by
Kousalya Raj
comments (7)
வேண்டாம் என்று
புறந்தள்ளும் போதெல்லாம்
வலுகட்டாயமாகத் திணித்து
விடுகிறார்கள் எதையாவது
தெரியாது என
ஒப்புக் கொண்டாலும்
பிடிவாதமாய் சொல்லித்
தருகிறார்கள் தெரிந்ததையே
பிடிக்கவில்லை என
நகர்ந்தாலும் பிடித்துத்தான்
ஆகவேண்டும்
வலிந்து பிரியத்தைக் கொட்டுகிறார்கள்
முடியாது என
மறுத்தாலும் ஏன் முடியாது
முடியும் என்று சொல்
உபதேசிக்கத் தொடங்கி விடுகிறார்கள்
நான் முடிக்க நினைக்கையில்
சரியாக எவரோ ஆரம்பித்துவிட
எனதியல்புகள்
என்பதெல்லாம் இல்லாததாகி
தொலைவதா
தொலைப்பதா யோசித்துத்
தொலைப்பதற்குள்
'வா போகலாம்' கைப் பற்றி
யாரோ இழுக்க
இதோ கிளம்பிவிட்டேன்
முற்றிலுமாக
என்னைத் தவிர்த்துவிட்டு...
Labels:
அனுபவம்
,
கவிதை மாதிரி
Posted by
Kousalya Raj
comments (6)
பிரியங்களை கோர்த்து
ஒரு வாழ்த்துச்சொல்ல
வார்த்தைகளை தேடித்தேடி
களைத்துப் போனேன் நான்
ஏதோ கையில் கிடைத்த எழுத்துக்களை
இதோ வரிகளாக்குகிறேன்
பிழை இருப்பினும்
ஏற்றுக் கொள்
அவை பிழைகள் அல்ல
என் பிரியங்கள் என...
வார்த்தைகளுக்குள்
நீ அடங்குவதும்
அதற்குள் உன்னை
அடக்குவதும்
அவ்வளவு எளிதா என்ன...
யாரோடும் ஒப்பிட நீ
அவர் போல்
இவர் போல் அல்ல
நீ வேறானவன்
என் நல்லவை அனைத்திற்கும்
வேரானவன்...
நீ நேரானவன்
முழுமைக்குள் மூழ்கிக் கிடக்கும்
நிறைவானவன்...
பேசுபவன் அல்ல நீ
பேசப்பட வேண்டியவன் !
அசாத்தியமும்
சாத்தியம் உன்னிடத்தில்...
அசாதாரணங்கள்
சாதாரணமாவது உன்னிடமே...
உலகின்
அத்தனை வாழ்த்துகளும்
ஒட்டு மொத்தமாய்
ஒன்றுச் சேர்ந்து
வாழ்த்தட்டும் இன்று !!!
போராளி பேரொளியாய்
மின்னட்டும் என்றும்...!!!!
இனிய நண்பர் தேவாவிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள் !!
(குருவை ஒருமையில் குறிப்பிட்டதற்கு பொறுத்துக் கொள்க) :-)