பல இரவுகள்
உறங்காமல் விழித்திருக்கிறேன்
விடிவதற்குள் கண்ணீரால்
கரைந்து போய் விடும்
துயரங்கள் என்று
கை நோக நோக
அழுத்தித் தேய்க்கிறேன்
என்மேல் படிந்திருக்கும்
முன் ஜென்மக் கரைகளை
கானல் நீரால்
கழுவித் தீர்க்கிறேன்
பிறருக்கு நான் இழைத்த
நிகழ்காலத் தவறுகளை
அழிக்க முயன்றும் பிடிவாதமாய்
உட்கார்ந்துக்கொண்டு வதைக்கின்றன
எனக்கு நான் செய்த துரோகங்கள்
அர்த்தமற்ற வாழ்க்கையில்
தேவனை தேடுவது மட்டும்
ஏனோ இன்னும் நிற்கவில்லை
இப்போதெல்லாம்
சாம்பல் பறந்து வந்து ஒட்டிக் கொள்கிறது
சுடுகாட்டை கடக்கையில்...
கண்களை இறுக மூடிக்கொள்கிறேன்
சுற்றிலும் நடைப்பிண மனிதர்கள்...
தலையில் சூடிக்கொண்ட மலரிலும்
ரத்த வாடை...
கல்லறைத் தோட்டத்தில்
உலாவுகிறேன் கனவுகளிலும்...
பிய்த்தெறிய முடியவில்லை
பிடிவாதமாய் ஒட்டிகொண்டுவிட்ட
சாவின் நிழலை...
அதனால்தான் என்னவோ
சாவு வீட்டிற்குச் சென்றவள்
சிரித்துவிட்டு வருகிறேன்...!!!
0 comments:
Post a Comment