உயிருடன் இருக்கிறேன்...!






வாசலில் போடப்பட்ட நாற்காலிகளில் 

துயரம் தோய்த்த முகத்துடன் பலர் 
அதோ நடுவில் இருக்கிறாரே 
அவர்தான் இறந்தவரின் மகன் 
யோசித்துக் கொண்டே அவரின் கைத்தொட்டு விலகி 
துக்கம் விசாரிக்கும் முறையை சரியாய் செய்தேனா 
யோசித்துக் கொண்டே உள்ளே சென்றேன்...
நடுக்கூடத்தில் கண்ணாடிப் பெட்டி 
கிடத்தப்பட்டிருந்த உடலில் சலனமில்லை 
சுற்றி அத்தனை பேர் கதறியும் !
போடப்பட்டிருந்த மாலைகளை விட 
எனது மாலை சிறியதாக இருக்குமோ
வந்த யோசனையை ஒதுக்கி வைத்துவிட்டு
மெல்ல இறந்தவரின் முகத்தைப் பார்த்தேன்
நான்  அழுகிறேனா ஆவலோடு 
முதுகில் துளைத்த  விழிகளை எண்ணி 
எனது விழிகள் வேலையை செவ்வனே 
தொடங்கிவிட்டிருந்தது.

'அழுகை வரவில்லை என்றால் முன்பு இறந்த உனக்கு மிக நெருக்கமான யாரையாவது நினைத்துக் கொள், அழுகை தன்னால் வந்துவிடும்'  சொல்லி அனுப்பிய சகோதரியை நினைத்துக் கொண்டேன்.

அழுகை வந்தேவிட்டது

இன்று இறந்தவனுக்காக நாளை இறக்கப் போகிறவர்கள் அழுவது விதியின் விந்தை !

கண்ணீர் வருவது நின்றதும் இனியும் நிற்பது நன்றாக இருக்காது என்று சுற்றிலும் பார்வையை சுழலவிட்டேன், என் உறவுகள் ஒரு இடத்தில் மொத்தமாக இருக்கவும் அருகில் சென்று அமர்ந்தேன்.

ஆரம்பித்தன விசாரிப்புகள்...

'எப்படி இருக்கிற, இப்ப எங்க இருக்கிற, நல்லா இருக்கே இல்ல'  எல்லா கேள்விகளும் கேட்டு முடிக்கப்பட்டன!   

அடுத்து ஏதேனும் துக்க வீடு வந்தால்
அவசியம் செல்வேன்
இன்னும் நான் இறக்கவில்லை
உயிருடன் இருக்கிறேன் என 
உறவுகளிடம் அறிவிக்க...!!





விடியல்



பிரித்தறிய இயலாத   
உன்  மௌனம்  புன்னகை
அர்த்தம்  தேடித் தேடி
தொலைத்துவிடுகிறேன்
வார்த்தைகளை
எனை சோதனைக்குள்ளாக்கி 
மகிழ்வதில் அப்படியென்ன 
ஆனந்தமோ உனக்கு...
தூக்கத்தில் ஆழ்ந்திருந்த வேளை
தூக்கிப் போனாயோ
இன்னும் விழிக்கவில்லை 
நானும் இரவும்...  
வாழ்க்கையை உன்னிடம் கொடுத்துவிட்டு  
வாழ்வதைக் கண்டு ரசித்திருக்க
வைத்து விட்டதென்னவோ 
வாழ வா  இல்லை நான் வாழவா ?!



நிழல் தேடி ஒதுங்கினேன்
வெட்டப்பட்ட மரத்தினடியில்
உன் மனம் தேடி
ஒதுங்கியது என் காதல்


* * *

விடியல் நீயென
நானிருக்க
அஸ்தமனம் இல்லா
என் உலகில் விடியல் ஏதடி
என்கிறாய்


* * *


image -google

யாருக்கானது ...!



                                                    'ம்' என்று நீ சொல்லும்                                               
                                                    ஒவ்வொரு முறையும்
                                                    ஓராயிரம் வார்த்தை சொன்னதாய்
                                                    திருப்திபட்டுக் கொள்ளச் சொல்கிறது
                                                    'ம்' உடன் தொடர்ந்து வந்த
                                                    உன் புன்னகை...!

                                                    * * *

                                                    சொல்ல வந்ததை மறைத்து
                                                    வேறு எதையோ
                                                    பேசி விடைபெறும்போது
                                                    விழுந்து நொறுங்குகிறது  
                                                    மனதைவிட்டு வெளியேறிவிட்ட
                                                    ஒலியற்ற சொற்கள் !

                                                    * * *

                                                    என்னவன்
                                                    தூங்கவேண்டும்
                                                    தொல்லைப் பண்ணாமல்
                                                    தொலைந்து போங்கள்
                                                    துரத்தி விட்டேன்
                                                    உன் மீதான என் நினைவுகளை...

                                                    * * *

                                                    வழக்கம்போல காசோலையில்
                                                    இன்று கையெழுத்திட்டேன்
                                                    ஏதோ வித்தியாசம் 
                                                    உற்றுக் கவனித்தேன்
                                                    எப்போது இணைந்தது
                                                    என் பெயருடன் உனது பெயர் !

                                                    * * *


                                                   அடுத்தவர் கவிதை வாசிக்கும் போது
                                                   உன் நினைவு வரும்
                                                   உன் கவிதை வாசிக்கும் போது
                                                   என் நினைவு போகும்
                                                   கவிதை யாருக்கானது என...!

                                                    * * *

                                                    எனக்கு உன் மௌனம் பிடிப்பதில்லை  
                                                    உனக்கு என் சத்தம் பிடிக்காது
                                                    இருவரும் இணையும் பொழுதில்
                                                    இரண்டு மௌனங்கள்                                                                                                                        பேசிக்கொண்டிருக்கின்றன
                                                    சத்தமாக !

                                                    * * *                                                    

                                                     





image -Google

ஈர்ப்பு விதி ...!




அன்னையிடம் இருந்து
தொடங்கியது என் உலகம்
சுழலத் தொடங்கியது
உன்னை சந்தித்தப்பிறகு !

வண்ணத்துப்பூச்சி எனக்கு தெரியும்
வண்ணங்கள் இருக்கிறது பார் என்றாய்
கம்பன் பாரதி உன் உறவென
அறிமுகப்படுத்தினாய்

அடைந்துக்கிடக்காதே
சிறகடித்துப் பற...
வானம் உன் வசமாகும்
என்றாய்

சிறகில்லை என்றேன் 
சிரித்துக் கொண்டே
அணிவித்து விட்டாய்
அதுவரை நான் அறியாச் சிறகை
என்னுள் இருந்து எடுத்து !?

படித்ததெல்லாம் மறந்தது என்றேன்
புதிதாய் படி கற்றுத் தருகிறேன் என்றாய்
உன்னையும் படிக்க வைத்தாய்
விரும்பிப் படித்தேன் !

பூட்டிய சிறகுடன் பறக்க
எத்தனித்தப் போது
எங்கோ கிளம்பிவிட்டாய் நீ...
காரணம் கேட்டேன்
'உன் நினைவுகள் 
என் நினைவுகள் அல்ல' 
காற்றின் வழி செவியை அறைகிறது
எனக்கான பதில் !!? 



* * * * *

image - Google

உனக்கெப்படி தெரியும் ...?!!!

                                                        
                                                       உனக்கெப்படித் தெரியும்

                                                       தீரத்தீர நேசித்தும்
                                                       தீர்ந்து போகாத
                                                       என் ஆசைகள் பற்றி...
                                            
                                                       உன்னை தேடித் தேடி   
                                                       ஒளி இழந்த 
                                                       என் கண்கள் பற்றி...

                                                       சொல்ல வழியின்றி 
                                                       மௌனத்தில் கரைந்த
                                                       என் நாட்கள் பற்றி...

                                                       நொடிக்கொருமுறை
                                                       இமைத்து இமைத்து விழிகளில்
                                                       தேக்கி வைத்த
                                                       என் பிரியங்கள் பற்றி...

                                                       நேரில் விவரிக்க
                                                       வழியின்றி
                                                       திரை மறைவில் கரைத்த
                                                       என் கண்ணீரைப் பற்றி...

                                                       தலையணைக்குள்
                                                       புதைத்து வைத்த
                                                       என் கனவுகள் பற்றி...

                                                       உன்னை வந்தடைய
                                                       நான் எடுக்கும்
                                                       பிரயாசங்கள் பற்றி...                                                      
                                                  
                                                       உனக்கெப்படி தெரியும்
                                                       
                                                       இரவு பகலாய்
                                                       உன்னை எண்ணித் துடிக்கும்
                                                       என் உயிரின் வலி பற்றி...

                                                      
                                                       நான் சொல்லாதவரை...!


காதல் சுகமானது...!





பிரியமே 

எப்படி தொடங்குவது என்று தெரியவில்லை ...உள்ளத்தில் நிறைத்து வைத்திருப்பதை எல்லாம் அவ்வளவு எளிதாக எழுத்தில்  கொட்டிவிட முடிகிறதா என்ன... என்னிடம் காதல் ஒரு காற்றை போல வரவில்லை புயலை போல காற்றாற்று வெள்ளத்தைப்  போல வந்தது... எந்த நிமிடம் முதல் உன்னை உள்ளத்தில் கொண்டேன் என்பதும் தெரியவில்லை... 

காலம் பல கடந்து இன்று வெகு சுலபமாக குற்றம் சாட்டுகிறாய் மறந்துவிட்டேன் என்று... உனக்கென்ன தெரியும் எனது பிரியங்களை பற்றி... அந்தியில் விரிந்து விடியலில் வாடிவிடும் மலரை போன்றதல்ல அவை...  
உன் மீதான எனது பிரியங்கள் வைராக்கியம் மிகுந்தவை, எனக்கும் கட்டுபடாதவை... உன்னைவிட்டு விலகிச் சென்றுவிடவேண்டும் என்று முயலும் போதெல்லாம் தலையில் குட்டி எனக்கு வலி தந்து உனக்கு சந்தோசம் பரிசளித்து ரசிக்கும் பொல்லாத பிரியங்கள் அவை! காலத்தின் மீது பழி போட்டு மௌனித்து விலகி நிற்கும் உன் போக்கை  'புரிதல்' என புரிந்து வைத்திருக்கும் எனது பிரியத்தின்  அசட்டுத்தனம் உனக்கு புரிய  வாய்ப்பில்லை.

'காதல் என்பது நேசிப்பது மட்டுமல்ல சூழ்நிலை புரிந்து விலகி நிற்பதும்' என்று முன்பொருமுறை நீ சொன்னதை நான் இன்னும் மறக்கவில்லை... பிரியமானவனின் மௌனத்தை எவ்வாறு மொழிப்பெயர்த்தாலும் அது காதல் என்றே வருவதன் காரணமும் இதாகவே இருக்கிறது. மனக் கட்டுபாடுகளை தகர்த்து எறிந்த காதலை விதிமீறல் என குற்றம் சாட்டமாட்டேன் ... காதலுக்கு ஏது  விதிகளும் மீறல்களும் விலக்குகளும்...

உனது சாயல் இல்லாமல் எதுவும் என்னை கடப்பதுமில்லை எதையும் நான் கடந்ததும் இல்லை... வாசித்த புத்தகங்களில் ராஜராஜ சோழனும் பாண்டிய பல்லவ மன்னர்களும் உனது சாயலைக்   கொண்டிருந்தது உனக்கு தெரிய வாய்ப்பில்லைதான்

தட்டுத் தடுமாறி
மெல்ல நடை பயின்று 
விழும் போதெல்லாம் தூக்கி
விடும் உனது நேசக் கரங்களை
இறுகப் பற்றிக் கொண்ட நாள் முதல்
இன்று வரை காதல் 
எனக்கு 
சுகமானதாகத்தான் இருந்தது

வண்ணத்து  பூச்சி என்னுள்
பறந்த போதெல்லாம்
அதன் அழகை அசைவு விடாமல் 
உன்னிடம் வர்ணித்த நாள்வரை 
நேசம் 
எனக்கு பிடித்தமானதாகத் தான் இருந்தது

நான்  எனது என்பது மறந்து
உனது எல்லாம் எனதானது முதல்...
சுற்றிச் சுழலும் உன்னை 
காற்றும் தீண்டக் கூடாதென
என்  பார்வையால் வளைத்து வைத்துக் கொண்ட
கடந்த நிமிடம் வரை 
காதல் 
எனக்கு பிடித்தமானதாகத்தான் இருக்கிறது

பேசிக்கொள்ளாமல் காதலை தொடருவது எவ்வாறு என்ற ஆராய்ச்சியில் வென்று இன்று மௌன அகராதி எழுதிக் கொண்டிருக்கிறாள்  இந்த  அகராதி பிடித்தவள்.

குட்டி சண்டையின் பிறகு  ஒரு சமாதானம்  அதற்காக காத்திருக்கும் தருணத்தில் பூக்கும் ஒரு புது காதல் ...இவ்வாறு ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் பூக்கச்செய்து அன்றலர்ந்த மலராய் மணம் வீசுகிறது  எனது காதல் ! அப்படியேத்தான் தான் இருக்கிறது எனக்குள்ளும் காதல் அன்று போலவே இன்றும்... என்னவொன்று அன்று பேசிப்  பேசி காதல் செய்தோம் இன்று மௌனங்களைப்  பரிமாறி காதலை  இளைப்பாற்றிக் கொண்டிருக்கிறோம்.

நீ பேசாவிட்டாலும்
நான் பேசிக் கொண்டுத்தான் இருக்கிறேன் 
உனக்கு கேட்கவில்லை
என்பதற்காக நான் பேசவில்லை
என்றாகிவிடுமா என்ன?

என்னை போலத்தான் நீயும் என்னையே நினைத்துக் கொண்டு காலத்திற்குள் உன்னை புதைத்து மௌனித்திருக்கிறாய் என புரிந்து வைத்திருக்கிறேன். உனக்காக எழுதிய கவிதைகளை நானே வாசித்து கிழித்துப் போட்டுவிட்டு  காகிதங்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறேன் பறந்துச் சென்று என்னவனை நலம் விசாரித்து வாருங்களேன் என்று... கேட்கவும் பார்க்கவும் பேசவும் எதுவுமில்லாமல் போனாலும் நான் இருப்பேன்  உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் உன் நினைவுகளை இறுக அணைத்துக் கொண்டு... !!!


இப்படிக்கு, 
உனது பிரியங்கள்.

வாழ்க்கை ...!


                                      
                                    
                                        என்ன என்னமோ எண்ணங்கள்
                                        எண்ணங்கள் எண்ணி எண்ணி
                                        எண்ணங்களின் எண்ணிக்கை
                                        ஏராளம்...
                                        ஏதோ எண்ணுகிறேன்
                                        ஏதோ பேசுகிறேன்
                                        எதையோ செய்கிறேன்
                                        என் எண்ணம் போல்
                                        எதையும்
                                        எடுக்கவும் இயலவில்லை...
                                        எதையும்
                                        கொடுக்கவும் மனதில்லை !
                                     
                                        பயணத்தில் பல நிறுத்தங்கள்
                                        ஒவ்வொன்றாய் கடக்கின்றேன்
                                        உடன் வந்த பலரும்
                                        நிறுத்தத்திற்கு ஒருவராய்
                                        இறங்கி செல்ல
                                        என் நிறுத்தம் வருவது எப்போது 
                                        தெரியாமல் தொடருகிறேன்
                                         பயணத்தை...

                                        எனக்கான நிறுத்தம்
                                        எதுவென சொல்லக்கூடியவர்
                                        என ஒருவரை கை காட்டினார்கள்

                                        எனது எதுவென
                                        கேட்க எத்தனிக்கும் தருணம் 
                                        மிக சரியாக
                                        அவரின் நிறுத்தமும் வந்துவிட
                                        இறங்கிச் சென்றே விட்டார்...!




படம்- கூகுள்