Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

உயிருடன் இருக்கிறேன்...!






வாசலில் போடப்பட்ட நாற்காலிகளில் 

துயரம் தோய்த்த முகத்துடன் பலர் 
அதோ நடுவில் இருக்கிறாரே 
அவர்தான் இறந்தவரின் மகன் 
யோசித்துக் கொண்டே அவரின் கைத்தொட்டு விலகி 
துக்கம் விசாரிக்கும் முறையை சரியாய் செய்தேனா 
யோசித்துக் கொண்டே உள்ளே சென்றேன்...
நடுக்கூடத்தில் கண்ணாடிப் பெட்டி 
கிடத்தப்பட்டிருந்த உடலில் சலனமில்லை 
சுற்றி அத்தனை பேர் கதறியும் !
போடப்பட்டிருந்த மாலைகளை விட 
எனது மாலை சிறியதாக இருக்குமோ
வந்த யோசனையை ஒதுக்கி வைத்துவிட்டு
மெல்ல இறந்தவரின் முகத்தைப் பார்த்தேன்
நான்  அழுகிறேனா ஆவலோடு 
முதுகில் துளைத்த  விழிகளை எண்ணி 
எனது விழிகள் வேலையை செவ்வனே 
தொடங்கிவிட்டிருந்தது.

'அழுகை வரவில்லை என்றால் முன்பு இறந்த உனக்கு மிக நெருக்கமான யாரையாவது நினைத்துக் கொள், அழுகை தன்னால் வந்துவிடும்'  சொல்லி அனுப்பிய சகோதரியை நினைத்துக் கொண்டேன்.

அழுகை வந்தேவிட்டது

இன்று இறந்தவனுக்காக நாளை இறக்கப் போகிறவர்கள் அழுவது விதியின் விந்தை !

கண்ணீர் வருவது நின்றதும் இனியும் நிற்பது நன்றாக இருக்காது என்று சுற்றிலும் பார்வையை சுழலவிட்டேன், என் உறவுகள் ஒரு இடத்தில் மொத்தமாக இருக்கவும் அருகில் சென்று அமர்ந்தேன்.

ஆரம்பித்தன விசாரிப்புகள்...

'எப்படி இருக்கிற, இப்ப எங்க இருக்கிற, நல்லா இருக்கே இல்ல'  எல்லா கேள்விகளும் கேட்டு முடிக்கப்பட்டன!   

அடுத்து ஏதேனும் துக்க வீடு வந்தால்
அவசியம் செல்வேன்
இன்னும் நான் இறக்கவில்லை
உயிருடன் இருக்கிறேன் என 
உறவுகளிடம் அறிவிக்க...!!





வினோதினி...!





திடமுடன் மீண்டெழுவேன்
காப்பாற்றுகள்
என்றாயே

அறைசுவரில் பட்டு தெறித்த
அவள் கதறல் ஒலி
நெஞ்சை அறைகிறதே...
காலமே புண்ணை ஆற்று
வடு என்னை வதைக்கட்டும்!

தைரியம் தன்னம்பிக்கையின் 
மொத்த  உருவம் 
நீ சென்றுவிட்டாய்
கையாலாகாத கோழைகள்
மட்டுமே மிச்சம் இங்கே...
பெண்ணியம் பேசி
தொலைக்காதீர்கள்
பெண்ணை தொலைத்து விடுங்கள்
மொத்தமாக...

கொடுபாதகம் கண்டும்
கையை பிசைந்து கொண்டு
வேடிக்கைப் பார்த்த 
என்போன்றோரை
மன்னித்து விடுமா...
நாளை  வேறு பெண்ணுக்கு
அஞ்சலி செலுத்த
நலமாய் இருக்கவேண்டும்
நாங்கள் !
காதலர் தினம் வேறு வருகிறது
தயாராக வேண்டும்
நாங்கள் !

உனக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
சொல்வதுடன்
திருப்திபட்டுக்கொள்கிறது
எனது மனித நேயம் !!??


* * * * *

ஒவ்வொரு துயர மரணத்தின் போதும் இது  இறுதியாக இருக்கட்டும் என்ற எனது  வேண்டுதல்கள் மட்டும் மாறவில்லை ...பெண்ணை  சக்தி என்ற கொண்டாட்டவும் வேண்டாம் சகதியில் தூக்கி எறியவும் வேண்டாம். சக உயிராக உணர்ந்து மதித்தால் போதும். காதல் என்ற பெயரிலும் போக பொருளாக எண்ணி விளையாடுபவர்கள் மன்னிப்பு பெற  கூட அருகதை அற்ற வக்கிர மனித மிருங்கங்கள்...

பெண்களின் மீதான கொடுமைகள் தொடருவதை கண்டும் காணாமல் இருக்கும் சமூகம் திருந்தாதவரை வினோதினிகள் பலியிடபடுவதும் நிற்க போவதில்லை என்பதை மிகுந்த வலியுடன் பதிகிறேன்.

வினோதினியின் மரணம் கொடுமை என்றால்  வலியுடன் அவள் நடத்திய மரண போராட்டம் கொடுமையிலும் கொடுமை. இத்தனை நாளாய் அவளுக்கு கிடைக்காத நிம்மதி அமைதி இனியாவது அவளை இறுக தழுவட்டும் என்ற வேண்டுதலுடன்...