உன் ஒருவனை தேடி
ஜென்மஜென்மமாய் அலைந்து திரிந்த
கதைகளை நான் சொல்ல
நீ கேட்க வேண்டுமென
நாட்களை வருடங்களில் கடந்து
காத்துக் கொண்டிருக்கிறேன்
அந்த ஒரு நாளுக்காக...
பேசாமல் தீர்ந்த பொழுதுகளை
தேடிப்பிடித்து
பேசிப் பேசித் தீர்க்கவும்
வாழாமல் வெட்டியாய் கழிந்த இரவுகளை
வாழ்ந்துக் கழிப்பது எவ்வாறெனவும்
யோசித்துக் கொண்டிருக்கிறேன்
அந்த ஒரு நாளுக்காக...
தனிமை துயரினை தீர்க்க
கனவினைப் போன்ற மருந்தொன்றை
உனையன்றி வேறு யார் தருவார்?
எனது கனவுகளை
நனவாக்கிய உனது கனவுகளை
கையில் ஏந்திக் கொண்டிருக்கிறேன்
அந்த ஒரு நாளுக்காக...
நெருக்கத்தின் நெருப்பில் நெஞ்சம் தகிக்க
விழிகளின் மோதலில் மோகித்து
விரல்களின் உரசலில் கிறங்கிக் கிடந்த
கற்பனைகளை சாத்தியமாக்கி
நமது முதல் சந்திப்பினை காவியமாக்க
முயன்றுக் கொண்டிருக்கிறேன்
அந்த ஒரு நாளுக்காக...
...
...
...
அன்றேனும் செய்வாயா... காதல்!
1 comments:
அருமை
Post a Comment