Showing posts with label அழிவு. Show all posts
Showing posts with label அழிவு. Show all posts

தேடல்......!



  

  காணவில்லை எனது  ஊர்....!?
  ஆடி கூடி மகிழ்ந்து வாழ்ந்த ஊர்
  பாவாடையில் ஒட்டிய மண்
  இன்னும் ஈரத்துடன் வாசமாய்  ! 
  என் தாய் அழைத்த குரல் 
  இன்னும் கேட்கிறது காற்றில் ! 

  என் நினைவோடும் உணர்வோடும்
  வாழ்வோடும் கலந்திருந்த ஊர்
  இன்று காணவில்லை....!? 
  மரங்கள் கோயில்கள் வீடுகள்
  தெருக்கள் பள்ளிகூடங்கள் கட்டிடங்கள்
  பாலங்கள் குளங்கள் கடைகள்
  ஏதும் இல்லை....!?

  போரால் பழிவாங்கப்பட்ட ஊர் 
  சாட்சியாய் பரந்த வெளி !
  எல்லா நினைவுகளுக்கும் 
  சாட்சியமற்ற பரந்த வெளி !
  
  மிச்சமாய்   
  அழிவின் சுவடுகள்
  என் உறவில் நான் மட்டும் !
  இன்றைய 
  ஒரே தேடல் என் ஊர் !

  போரென்றால் அழிவு நிதர்சனம்
  குண்டுவீச்சில் சிதைவு யதார்த்தம்
  ஊர் காணவில்லை எப்படி ?
  எங்கே போனது என் ஊர் ?

  உணவுக்கு மாற்றாய்
  தட்டில் நிறைந்த துயரம் ! 
  எதுவும் இல்லாத போதும்
  எல்லாம் இழந்த போதும் 
  வாழ்ந்தாக வேண்டுமே !!

  ****************************************

   ஈழம்
  ஆளும் கட்சிக்கு  உண்ணாவிரதம் 
  எதிர்கட்சிக்கு அறிக்கைகள் 
  பத்திரிகைக்கு சில நாள் செய்திகள் 
  என் போன்றோருக்கு கவிதைகள் !?