குறிஞ்சி பூ



    பனிரெண்டு  வருடம் கழித்து  
  பூத்த குறிஞ்சி பூவாய் நீ !
  அழகாய் இருப்பதால் ரசித்தேனா...?
  நான் ரசித்ததால்
  அழகாய் மாறினாயா ??  
  புதிதாய் என் சுவாசத்தில் 
  காதல் வாசம் வீச செய்து 
  வினா எழுப்பி 
  வேடிக்கை செய்கிறாய்.....!!
  அபத்தமும், அவஸ்தையும் 
  அன்றோ காதல் !
  தவணை முறை வருகை 
  தேவை இல்லை.... 
  தஞ்சமடைந்து விடு   
  நிரந்தரமாய் இன்றே !! 






இயற்கை....!

   
   
   பல அடிகள் வரை ஆழமாய் 
   தோண்டி.....
   தூண்களை எழுப்பி வெகு
   உறுதியாய் கட்டுமானம்
   வீடு எழும்பிற்று !
   கட்டியவனின் பெருமிதம் ,
   பலமான அஸ்திபாரம்
   எந்த புயல் மழைக்கும்
   என் வீடு தாங்கும்...??
   என்னே... 
   அவனின் அறியாமை
   வியந்தது இயற்கை....!
   பூமி பந்தே எந்த பிடிப்பும்
   இல்லாமல் அந்தரத்தில் !!?   



வலி



    ஒவ்வொரு வினாடியும் 
    விரைந்து  செல்லாதா
    என்று கடிகாரம் பார்த்து 
    பார்த்து கண் 
    நோக....
    
    இன்று மட்டும் ஏன் நேரம் 
    செல்லவில்லை என்று கடவுளை
    சபித்து..... சொன்ன நேரம் 
    வந்த பின்னும்,  ஏன் தாமதம் 
    என்று புரியாமல் விழி தேட... 
    
    மறுபடி கடிகாரம் பார்த்து
    கண்ணுடன் மனதும் நோக...
    காத்திருப்பின் தவிப்பும் வலியும் 
    புரியாமல் நிம்மதியாக இருக்க 
    எப்படி முடிகிறது...??!
    
    காத்திருப்பது சுகம் என்று 
    யார் சொன்னது...?
    சொன்னவர்கள் அனுபவித்து 
    பார்க்க வேண்டும் 
    அந்த வலியை......??!
    
    காத்திருப்பின் வலியை விட 
    வேதனை , அதன் பின் வரும்   
    உணர்ச்சிகள்  அற்ற மன்னிப்பு !
    
    காத்திருத்தலின் அதிகரிப்பில் 
    வார்த்தைகள் மரித்துவிடும் !
    உயிர்ப்பித்து விடும் மௌனம்....!!? 

சங்கமம்





ஊர் உறங்கியதும் எழும் 
உன் ஞாபகங்கள் உள்ளே அனலாய் 
கொதிப்பதென்ன......?! 


நான், என் சூழல்  அனைத்தும் மறந்தே
நீ ஒருவனே நிறைவாய் வலம் 
வருவதென்ன.......?! 


என்னை என்னிடமிருந்து பிரித்து
உனக்கானவளாய் மாற்றிய 
சுயநலமென்ன.......?!


ஒரு உடலில் இரு நினைவுகளாய்
எனக்குள் கூடு விட்டு கூடு மாறும் 
விந்தையென்ன.......?! 


யாருமற்ற நடுநிசியில் நம் 
இருவரின் நினைவுகளின்  
சங்கமமென்ன.......?! 


இதுவரை இல்லா மாயமாய்  
கண்ணாடியில் உன் உருவம் கண்டு 
வியந்ததென்ன.......?!


உயிர் தேடும் தேடல் என்று 
முடிவுறும் என்றே நாட்களை 
எண்ணியதென்ன.......?!


'உன்னை வென்றுவிட்டேன் பார்' என்று உன் 
இதழோர சிறு புன்னகை என்னை ஏளனம் 
செய்கிறதென்ன.......?! 


விடை பகிரமாட்டாய்  என்று தெரிந்தும் 
எனக்குள் எழுகின்ற கேள்விகளுக்கு 
முடிவுதான் என்ன...? என்ன....?? 


   

ஓவியம்

உன்னை ஓவியம் தீட்டுவதைபற்றியே யோசித்து 
கொண்டிருக்கிறேன்...!
இப்படி வரையலாமா,
அப்படி வரையலாமா
என்ற கற்பனையில்...!
அழகாக வரைய வேண்டுமே என்ற
கவலையில்.....!
நாட்கள் கடந்தன... 
இன்னும் வரைய தொடங்கவே
இல்லை இன்று வரை, 
என்பதே பெரும்சோகம் ?!



போகிறேன் ?!

  உன் நடையின் சப்தம்
  மௌனத்தின் நிசப்தம்
  இவைகூட உன் காதலை
  எனக்கு 
  உணர்த்த தான் செய்தன.....!
  
  நாம் பிரிந்து இருக்கும்
  நேரங்களிலும் நம் 
  காதலை நிரூபித்தது
  கனவுகள் கூடத்தான்...!
  
  தனி தீவாய் 
  நான் இருக்கிறேன்
  உன் நினைவு என்னும்
  நீரால் சூழப்பட்டு....!

  வானத்தில் பறந்து கொண்டே 
  சிறகுகளை சந்தேக படுகிறாய் நீ ! 
  பூவின் மென்மையை  ரசி 
  இதழ் இதழாய் 
  பிய்த்து ஆராய்ச்சி செய்யாதே ?!

****************************************
  
   காதல் போயின் காதல் போயின் 
  சாதல் என்றான் பாரதி. 
  மறுக்கிறான் 
  அவன் வழி வந்தவன்
  காதல் போயின் காதல் போயின் 
  மற்றொரு காதல்........??!

*****************************************

  சிறு ஊடல் வழக்கம்போல்
  கூடலாய் மாறும் என 
  ஏமாந்த மனம்.
  எந்த அணைகட்டி தடுக்க 
  போகிறேன்
  விழி நீரை
  வழியற்று யாசிக்கிறேன்.
  சாதாரணமாகி 
  போனதே நேசம் ??! 


******************************************




  

உன்னை....?!

  
  மிக பிடித்த மாலை நேர இளம்வெயில் !
  மேற்கே செந்நிற வானின் பிரமாண்டம் !
  மெல்ல இதழ் விரித்து கொண்டிருக்கும்
  நித்யமல்லி வாசனையின் ரம்மியம் !
  முழுதும் மலர்ந்து அழகை கொட்டி 
  சிரிக்கும் அந்திமந்தாரை ! 
  கதிரவன் மறைந்ததை பார்த்து  
  மெதுவாய் தலைநீட்டும் சந்திரன் !
   வீதியில் சிறு குழந்தைகளின்
   உற்சாக விளையாட்டு கூச்சல்கள் ! 
   மாலைநேர  முற்றம்  தெளித்ததால் எழும்
   மண்ணின் இனிய நறுமணம் ! 
   இவை அனைத்தும் தினம்  
   என்னை உற்சாகமடைய செய்யும்.... 
   ஏனோ மனம் எதிலும் லயிக்கவில்லை 
   இன்று விடியற்காலை  
   உன்னை பார்க்கவில்லை நான்...??!