Showing posts with label இனியது காதல். Show all posts
Showing posts with label இனியது காதல். Show all posts

'இனியது காதல்' தொடர் - 3

நீண்ட நாள் சொல்லாமல் இருந்து கடைசியில், சொல்லிய அன்றே மனம் சுத்தமான 'ஒரு உண்மை காதல்' ஒன்று இருக்கிறது.....!
என்று முந்தைய தொடரில் சொல்லி இருந்தேன்.  இங்கே அதை தொடருகிறேன்....





'காதல்'  நேசிக்க மறந்தவர்களை ஒரு போதும் நேசிப்பதில்லை.  
                                                                                                        - ஷேக்ஸ்பியர் 



சென்னையின் சந்தடி மிகுந்த பகுதிகளில் இருந்து சற்று ஒதுங்கி இருக்கும் ஒரு ஏரியா ஒன்றில் தான் நாங்கள் அப்போது குடியிருந்தோம். தனி தனி காம்பவுண்ட் வீடுகள் வரிசையாய் அணிவகுத்து ஒரு ஒழுங்கில் இருக்கும். தெருவின்  இரு மருங்கிலும் குல்மோகர் மரங்களும், கொன்றை மரங்களும் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்து நிற்கும் அழகே அழகு. 


வசந்த காலத்தில் மரங்களில் சரம் சரமாக தொங்கும் கொன்றை மலர்களும், சிகப்பு நிற குல்மோகர் பூக்களும் மலர்ந்து மணம் வீசி அந்த ஏரியா முழுவதையும் ஒரு மயக்கத்தில் ஆழ்த்திவிடும். காலையில் வாக்கின் செல்பவர்கள் தரையில் படர்ந்திருக்கும் பூக்களின் மேல் தங்கள் கால்கள் படாதவாறு தட்டு தடுமாறி செல்வதை பார்க்கும் போது மிகவும் அழகாக இருக்கும். 

"திங்கள் கிழமை வந்தாலே இப்படித்தான், முதல் நாள் லீவ் நினைப்புலேயே ரொம்ப நேரம் தூங்கிறது...நேரம் ஆச்சு எழுந்திரு, காலேஜ் போற வழிய பாரு " 


ச்சே நல்ல கனவை இந்த அம்மா கெடுத்திட்டாங்களே , இத்தனை நாளா முகம் காட்டாமல் பேசிட்டு மட்டும் போன என் கனவுக்காதலன் , இன்று தான் மெதுவா என் பக்கம் திரும்பினான், நல்லா முகத்தை பார்க்கலாம்னா இந்த அம்மாவால அதுவும் போச்சு....?!! 


"இன்னும் என்னடி பண்ற ?" "இதோ வந்திட்டேன்மா"  மிச்ச தூக்கத்தை போர்வையுடன் மடித்து கட்டிலில் ஓரமாய்ப் போட்டுவிட்டு எழுந்தேன். 


முகம் வரை இழுத்து போர்த்தி தூங்கிட்டு இருந்த என் தம்பியின் மேல ஜக்கில் இருந்த தண்ணிய ஊத்திட்டு, அவன் எழுந்து என்னை அடிக்க வருவதுக்குள் அங்கே இருந்து ஒரே ஓட்டம். எனக்கு என்னவோ இன்றைய விடியல் எனக்காத்தான் என்பது போல மனசு பூரா உற்சாகமாக இருந்தது.  

ஜன்னலை திறந்து சூரிய நண்பனுக்கு ஒரு குட் மார்னிங் சொல்லிட்டு வாசல் தெளிக்க பக்கெட் தண்ணியுடன் வெளியில் வந்தேன். பக்கத்து காம்பௌண்டில் ஒரே சத்தமாக கேட்டது...ரொம்ப நாளா பூட்டி  இருந்த வீட்டில் இப்ப என்ன சத்தம் என்று மெதுவா வாசல் தெளிச்சிட்டே எட்டி பார்த்தேன்...புதுசா குடி வந்திருக்காங்க போல...அடடா இது என்னடா என் தனிமைக்கு வந்த சோதனை...?!! பக்கத்தில் யாரும் இல்லாத தைரியத்தில் எப்பவும் மொட்டை மாடியே கதின்னு இருப்பேன்...நானும் நிலாவும் தனியா பேசிட்டு பல நாள் இருந்திருக்கோம்...இனி அப்படி முடியாதேனு இருந்த உற்சாகம் எல்லாம் அப்படியே வடிந்துவிட்டது. 

"கோலம் போட போனா அதை பண்ணாம என்ன யோசனை" உள்ளே இருந்து குரல் வர, வேகமா ஏதோ ஒரு கோலத்தை போட்டுட்டு வந்திட்டேன். 


வெளியில் வந்த என் அம்மா "என்னடி welcome கோலம் போட்டுட்டு வந்திருக்க , யாரை வரவேற்க போற" னு கேட்க, 


எனக்கு  ஒண்ணும்  புரியல, வேற ஒரு  கோலத்திற்கு தானே புள்ளி வச்சேன், எப்படி மாறியது  !?? 


"சரி விடுமா, இதும் கோலம் தானே !"  என்று சமாளிச்சிட்டு காலேஜ் கிளம்ப ரெடியானேன். 

காலேஜில் எனக்கு இது முதல் வருடம். எனக்கு பிடிச்ச மேஜர் பிசிக்ஸ்...அதனால அந்த சப்ஜெட் மட்டும் ஒழுங்கா படிச்சிடுவேன், மத்ததெல்லாம் ஏனோ தானோ தான்...! குளிச்சி ரெடி ஆகி எனக்கு ரொம்ப பிடிச்ச நீல கலரில் வெள்ளை பூக்கள் இறைத்த சுடிதார் அணிந்து துப்பட்டாவை வேகமா பின் குத்தினேன், ஆ பின் விரலில் குத்தி ஒரு துளி ரத்தம் வெளியில் ஹாய் சொல்லுது. ஸ் என்னாச்சு இன்னைக்கு எல்லாம் ஒரே ஏடாகூடமா இருக்கேன்னு யோசிச்சிட்டே அம்மா கொடுத்த இரண்டு இட்லியை நின்னுட்டே உள்ளே தள்ளிட்டு இருந்தேன். 

காலிங்பெல் குக்கூ னு கூப்பிட,  இதோ வரேன்னு சொல்லிட்டே கதவை திறந்தேன்... இந்த ஏரியாவில் இதுவரை பார்க்காத  இரு புது முகங்கள், இளைஞன் ஒருவனும் , நடுத்தர வயதில் ஒரு பெண்ணும் நின்றுகொண்டிருந்தார்கள்.  (நமக்கு தான் ஒரு  நிமிஷம் போதுமே அவங்களை ஸ்கேன் பண்ண.....!) 


அந்த பெண்ணிற்கு ஒரு 30 வயது இருக்கும் அழகா அம்சமா இருந்தாங்க.  அந்த பையனுக்கு அக்காவோ, அண்ணியாகவோ இருக்கலாம், அப்புறம் அந்த பையன், வயசு என்ன ஒரு 20 , 21 இருக்கும்...  அந்த கலரில் ஒரு பெண் என்றால் சூப்பர் பிகரா இருப்பா...ஆனா இப்படியா கோதுமை கலரில் பையன் இருக்கிறது...சுத்தமா நல்லா இல்லை...(பசங்க கொஞ்சம் மாநிறமா, லேசா கருப்பா இருந்தா ஓ.கே,  ஆனா இது ஒரு தேறாத கேஸ்...!) 


அந்த பெண் சிரிச்சிட்டே என் அம்மாவிடம், "வணக்கம். இந்தாங்க, குங்குமம் எடுத்துகோங்க... நாங்க பக்கத்து வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்கோம் "   (என் சுதந்திரத்தை கெடுத்திட்டு குங்குமம் வேற தரீங்களா...?!) நானும் வாங்கனு ஒரு வணக்கம் சொல்லி அந்த குங்கும சிமில்ல  இருந்து கொஞ்சம் தொட்டு நெத்தில வச்சிட்டு "சரிம்மா நீங்க பேசுங்க, எனக்கு நேரம் ஆச்சு நான் கிளம்புறேன்" னு பேக் எடுத்து மாட்டிட்டு வெளியில் வந்துவிட்டேன். 

வெளி கேட்டை  திறக்கும் போது அந்த இளைஞன்  பக்கம் பார்த்தேன் , இரண்டு பெண்கள் பேசும் போது நாம என்ன செய்யனு வாசலில் தொங்கிட்டு இருந்த மணி பிளானட் செடியை ஆராய்ச்சி செய்றார் போல...?!!   சரியான அம்மாஞ்சி போலன்னு நினைச்சிட்டு ஒரு முறை சத்தமா "போயிட்டு வரேன்" னு கத்தினேன். "ஏண்டி இப்படி கத்துற, சரி பார்த்து போயிட்டு வா" அம்மா. 

இந்த சத்தம் கூட காதில் விழாத மாதிரி ஆராய்ச்சி தொடர்ந்து  கொண்டிருந்தது. என்ன ஜென்மமோ, இப்படி ஒரு வயசு பொண்ணு பக்கத்தில் இருக்கிறதை கூட கண்டுக்காம, பெரிய திமிர் பிடிச்சவனா இருப்பான் போல...!? சரி நமக்கென்ன வந்தது ? வாசல் கேட்டை இழுத்து அடைச்சிட்டு தெருவில் இறங்கி  நடக்க தொடங்கினேன். வழி முழுவதும் எதையோ மறந்து விட்டுட்டு வந்ததை போலவே தோன்றியது.....?!!


அவஸ்தைகள் தொடரும்...... 




பின்குறிப்பு
(முதல் முறையாக ஒரு கதை (?) மாதிரி எழுத முயற்சி பண்ணி இருக்கிறேன்...குறை இருந்தால் தயங்காம சொல்லிடுங்க...இத்தோட இப்படி எழுதுறதை நிறுத்திக்கிறேன் ...!!?)

பிரியங்களுடன் கௌசல்யா


     

'இனியது காதல்' தொடர் 2


காதலை பற்றி தொடர் எழுதத் தொடங்கியதும் புதிதாய் காதலிப்பவர்களை போல எனக்குள்ளும் பட்டாம்பூச்சிகள் பறக்கத்தொடங்கி விட்டது என்றால் பார்த்து கொள்ளுங்கள் காதலின் வீரியத்தை...! காதல் என்பது வயதை, இயல்பை மறக்க செய்யும் !!

"நாம் எதில் வேண்டாம் என்று தீர்மானமாக  இருக்கிறோமோ அதை சோதிக்கவே பல காரியங்கள் இயற்கையாக  நடைபெறும்" காதலுக்கும் இது ரொம்பவே பொருந்தும்.

(இந்த தொடரை மேலும் தொடருவதற்கு முன் சில விளக்கங்கள். தொடரின் முதல் பதிவிற்கு வந்த கமெண்ட்ஸ் வச்சி பார்க்கிறப்போ காதல் வந்தால் பெத்தவங்களை பகைச்சிட்டு ஓடி போய்டுவாங்க, இது உடலை மட்டுமே சார்ந்தது, உண்மையான காதல் என்று ஏதும் இல்லைன்னு சொல்லி இருந்தாங்க....!!? நாட்டில காதலால் நொந்தவங்க தான் பாதி பேர் என்று நினைக்கிறேன்)

நான் இந்த தொடரில் சொல்ல இருப்பது அழகான மென்மையான காதல் உணர்வை பற்றியது  மட்டும்தான். மனதை என்றும் இளமையாகவே வைத்திருக்கும்  காதலை பற்றி மட்டுமே இங்கே பேசுவோமே....! காதலர்கள் செய்யும் தவறுக்கு காதல் என்ன செய்யும்....?

 'காதல் ஒரு போதும் தோற்பதில்லை' 'காதலர்கள் தான்  தங்களுக்குள் தோற்று போகிறார்கள் !!'

எனக்குள் எப்போதும்  இருக்கும் கர்வம் , கோபம், பிடிவாதம், வைராக்கியம், குரலில் எப்போதும் தொனிக்கும் ஆணவ தொனி அனைத்தும், காதல் என்னை அழைத்த மறுநொடியில் அப்படியே மறைந்து மண்டியிட்டு விழுந்து விடும் அதன் காலடியில், எந்த நிபந்தனையும் இன்றி.......!! ஒரு முறை இரு கண்களையும்  மூடி மெதுவாய் 'காதல்' என்று சொல்லி பாருங்கள்...... உடம்பில் ஒரு சிலிர்ப்பு மெதுவாய் பரவுவதை உணர முடியும்....


இதை காமம் என்று எள்ளி நகையாடி வசைபாடுகிறது ஒரு கூட்டம். அந்த கூட்டம் ஒன்று காதலில் தோற்றவர்களாக இருக்க வேண்டும் அல்லது  காதல் கிடைக்காமல் ஏங்குபவர்களாக இருக்க வேண்டும். அனைவருமே ஏதோ ஒரு சமயத்தில் காதல் வயப்பட்டு இருந்திருப்பார்கள்....! மனிதர்கள் பிறப்பதற்கு காதல் ஒரு வேளை காரணமாக இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் மனிதனாய் வாழ நிச்சயம் ஒரு காதல் வேண்டும்.

பலருக்கும் தங்களின் முதல் காதல் இன்றும் ஸ்பெஷல் பொக்கிஷம் தான். அதை நினைக்கும் போதெல்லாம் மனதில் ஒரு துள்ளல் எழத்தான் செய்யும். பதின்ம வயதில் ஏற்படும் இனக்கவர்ச்சியாக இருந்தாலுமே அதிலும் கொஞ்சமாவது  ஒரு காதல் இருக்கத்தானே செய்யும்.....கொட்டும் மழையும் இதம் தான், சுட்டெரிக்கும் வெயிலும் குளுமைதான்.....!

காதலை பார்க்கும் பார்வைகள் வேறு படலாம்...ஆனால் காதல் மட்டும் அதே அழகுடன்,  அதே துள்ளலுடன், அதே பரவசத்துடன், அதே இனிமையுடன், அதே இளமையுடன் நித்திய கன்னியாக இருக்கிறது.

காதல் மனிதர்களிடம் மட்டும் இல்லை செடி கொடிகள் விலங்குகள்,பறவைகள் இனத்திலும் காதல் உண்டு. எல்லோருக்கும் தெரிந்து இருக்கலாம், இருந்த கொஞ்ச நீரையும் தன் துணை அருந்தட்டும் என்று விட்டுக்கொடுத்த 'மான்கள் கதை'யை.....!இறுதிவரை இரண்டுமே ஒன்றுக்காக ஒன்று விட்டு கொடுத்து நீர் அருந்தவில்லை. குளத்தில் இருந்த சிறிய அளவு நீரும் அப்படியே குறையாமல் இருந்தது, அவை ஒன்றின் மேல் ஒன்று வைத்திருந்த காதலால் தான் !!

" நீரில் வாழும் அன்றில் பறவைகள் இணைந்தே நீந்தும், இணைந்தே இரையுண்ணும். ஒருமுறை நீந்தும் போது நீர் பூ ஒன்று நடுவில் குறுக்கிட்டுவிட்டது. பூவின் அகலம் கொஞ்சமே, சுற்றி வர இடைப்பட்ட நேரம் ஒரு நொடியே...ஆனால் அந்த அன்றில்கள் பல ஆண்டுகாலம் பிரிந்து விட்டது போன்று வருந்தினவாம்...! " என்னே அதன் அன்பு ! அதற்குள்ளும் காதலை வைத்து இருக்கும் இயற்கையை வியக்காமல் இருக்க இயலவில்லை...!

ஒரு ஜென் கவிதை

காதலன்

அன்பே !
இன்று இரவுக்குள் நான் சாகப் போகிறேன்
எனக்குத் தெரியும்
விடியலில் முதல் ஒளிக்கீற்றாய்
நீ வருவாய் !

காதலியின் பதில்

அன்பே !
இந்த இரவுக்குள் நீ சாகப் போகிறாய்
அந்தியின் முதல் இருளாய்
நான் வருவேன் !

இதுதான் காதலோட அழகான உண்மையான சுத்தமான அன்பு ! தூய அன்பு இப்படி தான் இருக்கும் !

காதல் வந்தால் கவிதை எழுதியே ஆக வேண்டும் இது காதலின்  கட்டளை மீற முடியாதே....! காதலில் சோகம் என்றால் கவிதைகள் இப்படியும் எழுதப்படலாம்...!

நேற்று 
என்  விழிகள் சிரித்தது 
உன் இதழோர புன்னகையில்  
இன்று 
விழிகள் நீர் வார்க்கிறது 
அது ஏளன சிரிப்போ என்ற
சந்தேகத்தில் !?

நேற்று இன்று 
ஒரே வித்தியாசம் 
நேற்று வாழ்ந்தேன் 
இன்று மடிந்தேன் 

எனது மரணமோ 
உன் வருகை நாளோ 
எது முன்பு வந்து 
என்னை அழைத்திடுமோ !  

சாவின் 
கடைசி நொடியில்
காதலி...
'வேறு யாரும் என் அளவிற்கு
உன்னை காதலிக்க முடியாது'

சாகும் போதும் ஒரு காதலிக்கு எவ்வளவு நம்பிக்கை தன் காதலின் மீது...!

அந்தஸ்து, படிப்பு, வயசு, உடம்பு, அழகு இதெல்லாம் அன்புக்கு ஒரு தடை  கிடையாது....!

இந்த கவிதைகள் உங்கள் மனதை கொஞ்சமேனும் தொட்டு இருந்தால் புரிந்து கொள்ளுங்கள், உங்கள் மனதின் ஓரத்திலும் சொல்லபடாத ஒரு காதல், ஒரு நேசம்  ஒளிந்திருக்கலாம்.......! சொல்லி விடுங்கள்....சொல்லி விட்டு மனதை சுத்தப்படுத்தி கொள்ளுங்கள்.....!!



பின் குறிப்பு....

நீண்ட நாள் சொல்லாமல் இருந்து கடைசியில், சொல்லிய அன்றே மனம் சுத்தமான 'ஒரு உண்மை காதல்' ஒன்று இருக்கிறது.....! அதை பற்றி தொடரும் தொடரில் சொல்கிறேன்....


மீண்டும் சந்திப்போம் காதலில்....!