இனியது காதல்......! தொடர் 1


வாழ்க்கையில் காதலை சந்திக்காதவர்கள், அறியாதவர்கள் என்று யாரும் இல்லை. பெண்ணாக 'என் பார்வையில் காதல்' என்பதை பற்றி எழுத வேண்டும் என்று நீண்டநாளாய் ஒரு  எண்ணம். அதற்கு நேரம் சரியாக அமையாததால் தான் கவிதையாக  காதலை சிதறடித்து கொண்டிருந்தேன்.....!!?

மனதிற்கு சுகமான, அதே நேரம்  நினைக்கும் போதெல்லாம்  மனதில் உற்சாகம்  கொப்பளிக்கும் அற்புத உணர்வை வார்த்தைகளில் கொண்டு வர இயலுமா என்ற ஒரு தயக்கம் இருந்ததால் தான் இதுவரை எழுதவில்லை. இனியும் தாமதித்தால் என் மனதில் இருக்கும் காதல் 'காலாவதியாகிவிடுமோ' என்று தான் எழுத தொடங்கிவிட்டேன். காதல் என்றாலே அபத்தமும் அவஸ்தையும் நிறைந்ததுதான் என்று சொல்வாங்க...அது மாதிரி இந்த தொடரிலும் ஏதும் அபத்தம் இருந்தால் அழகாய் சுட்டிகாட்டுங்கள்....! (உங்களை நம்பித்தான் இந்த கடலில் குதிக்கிறேன், நீந்த சிரமபடுறேனு தெரிஞ்சா கொஞ்சம் கரை சேர்த்து  விட்டுடுங்க.....!!)  


" என் கை விரல்களுக்கு இடையே இருக்கும் இடைவெளி, உன் கை விரல்கள் கொண்டு  கோர்க்க வேண்டும் என்பதற்காகதான் "

'காதல்' இந்த ஒரு வார்த்தையில் தான் இந்த உலகம் இன்னும் அழகாய், இளமையாய் உயிர்ப்புடன் இருக்கிறது. இன்னொரு நிலவாய் காதலியை வருணிக்க முடிகிறது........!வானமாய் மாறி அந்த நிலவை கையில் ஏந்திக்கொள்ள செய்கிறது......! காதல் வந்த பின் தான் நிலா என்ற ஒன்று வானில் இருப்பதே தெரிகிறது.....! பார்க்கும் எல்லாம் புதிதாய் , அழகாய் மாறிவிடுகிறது......பரீட்சையில் தமிழை சொதப்பியவர்கள் கூட காதல் வந்த பின் இலக்கிய நயத்துடன் கவிதை எழுதுகிறார்கள்....பார்க்கும் அத்தனையிலும் தன் காதலி/காதலன்  முகம் தேடுகிறார்கள்......!!


உடல் ரீதியாக  பார்த்தால், காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற இயல்பான ஒரு உணர்வு. அறிவியல் ரீதியாக  பார்த்தால் காதல் என்பது சுரப்பிகளின் விளையாட்டு. ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் அட்ரினலின் போன்ற சுரப்பிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள். பருவம் வந்த அனைவருமே  காதல் வயபடுவார்கள்  என்றாலும் சிலர் ரொம்ப பிடிவாதமாக விலகி இருப்பார்கள்....

சிலர் நினைக்கலாம் புத்திசாலி பெண்கள்/ஆண்கள் காதலில் ஈடுபட மாட்டார்கள் என்று...!?  ஆனால் காதல் உணர்வு சம்பந்த பட்டது. பகுத்தறிவு இங்கே வேலை செய்வது இல்லை.

அதாவது நடப்பதை Cerebral cortex (பகுத்தறிவு மூளை ) வேடிக்கை தான் பார்க்கும். காதல் வயப்படும் ஆணும், பெண்ணும் வெவ்வேறு வேதிப்பொருள்களே . அவை ஈர்க்கப்படும் போது நிகழும் மாற்றங்களை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அப்போது உருவாகும் PEA (பெனைலிதிலேமைன்) என்கிற மாலிக்யூல்கள் மூளைக்குள் ஏற்படுத்துகிற சிலிர்ப்பையும் , பரவசத்தையும் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது.......இந்த நிலை ஏற்பட்டு விட்டால் புத்திசாலித்தனம் எல்லாம் காற்றில் பறந்து விடும்.  

காதல் என்பது அப்பட்டமான 'சுயநலத்தின் வெளிபாடு' என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். இது உண்மையும் கூட இந்த சுய நலம் தனக்குரியவன்  தன்னிடம் மட்டும் தான் பேச வேண்டும் தன்னை மட்டுமே முக்கியமானவளாக கருத வேண்டும் என்பதை போன்றது தான். தன் காதலனை தனக்குள் முழுதும் இழுத்து வைத்து கொள்வதை   போன்ற அழகான சுயநலம்.....!!

இந்த காதலில் மூழ்கியவர்களுக்கு வெளி உலகத்தில் நடப்பதே தெரியாது. அடிக்கடி சின்ன சின்ன சண்டைகள், கோபங்கள் எல்லாமே இனிமைதான்.  ஊடல் மெதுவாய் விலகும் அந்த அற்புத தருணம்.... வார்த்தையில்  வடிக்க இயலாது..அனுபவித்து பார்க்கவேண்டும்.....அந்த இனிமையை அனுபவிக்காதவர்கள் பாவம், கொடுத்து வைக்காதவர்கள்.....!?

காதல் இருந்தால் கண்ணுக்கும் இமைக்கும் நடுவில் கூட வசிக்க  முடியும் என்பார்கள் காதலர்கள்.....!!

நான் : ரயில பிரயாணம் எப்படி ? நல்ல படியா இருந்ததா ??

நண்பர்  : அப்பர் பெர்த் குடுத்திடாங்க , அதான் கஷ்டமாப்போச்சு !

நான் : லோயர் பெர்த்காரங்கக் கிட்ட சொல்லி மாத்திக்க வேண்டியது தானே ?

நண்பர்  : நானும் அதைத் தான் யோசிச்சேன். ஆனா கடைசி வரைக்கும் லோயர் பெர்த்துக்கு யாருமே வரல...!!? 

நான் : ????

உணர்வுகள் தொடரும்.....

மறதி...!

             
                
                ரசிக்க கற்று கொடுத்தாய்
                
                இயற்கை விடுத்து உன்னை !
                
                நேசிக்க கற்று கொடுத்தாய்
                
                உயிரை  விடுத்து உன்னை !
                
                காதலிக்க கற்று கொடுத்தாய்
                
                என்னை  விடுத்து உன்னை !
                
                மறக்க கற்றுக்  கொடுத்தாய்
                
                உன்னை விடுத்து அனைத்தையும் ! 
               
                ஆனால்
               
                கற்று கொடுத்த எதையும் 
               
                நீ கற்க மறந்து விட்டாய்..... !!?






உயிரே நீயாய்....!


உன் நினைவு 
எனக்கு வருவதே இல்லை !
உண்மைதான்.....?!

                     நான் உடுத்தும் உடையாய் !
                           உண்ணும் உணவாய் !
                     பருகும் நீராய் !
                           சுவாசிக்கும் காற்றாய் !
                     விரும்பி கேட்கும்
                           எனக்கு பிடித்த பாடலாய் !
                     என் பேருந்து பயணத்தில்
                           ஜன்னலோர சீட்டாய் !
                     என்னுடன் பேசி பின்னோக்கி
                           நகரும் மரங்களாய் !
                     ரசித்து நனைந்து மகிழும்
                           குளீர் மழையாய் !
                     என் தோட்டத்தில் தினம்
                           பூக்கும் ரோஜா மலராய் !
                     
                      வாசலில்  போடும் கோலமாய் - அதில் 
                           உன் பெயரே புள்ளியாய்
                      மாலையில் வீட்டு பந்தலில்   
                           மலர்ந்த நித்யமல்லியாய் !
                      கவிதை எழுதும் பேனாவாய் - அந்த
                            பேனா எழுதும் கவிதையாய்
                      அனைத்திலும் மெய்யாய், உருவாய்,
                             நீயாய் காண்கிறேன் - தனியே
                      இனம் பிரித்து நினைக்க  
                             அறியேன் நான்.....!!
                      என்னில் கலந்து, கரைந்து,
                             மறைந்து போன உன்னை 
                      நீயே தேடினாலும்  
                             கிடைக்க மாட்டாய்.....?!!


தவிப்பு....!

   காதலே
   உனக்கும் வெட்கம் வரும்
   என்னவன்  சிரித்தால் !
   இன்று எனக்கு 
   கோபம் வருகிறது
   அவன் சிரிக்க மறந்ததால் !
   ஏன்
   இந்த கள்ள மௌனம்
   எங்கே கற்றாய்......?!
   உன் இருப்பை
   உறுதி படுத்த நான்
   எடுக்கும் பிரயத்தனம்
   கொஞ்சமா.....?!
   நழுவியே செல்கிறாய்
   நதி நீர் ஆடும்
   மீனை போல !
   அன்பு தூண்டிலை விட
   வலியதா உன் பணி...
   மாட்டி கொள்கிறாய் 
   சுலபமாக அங்கே !
   தவிர்த்து  
   தவிக்க விடாதே
   வேண்டாம் பெண் பாவம்
   பாவம் பெண் !
   கருணை பார்வை 
   ஒன்று வீசிச் செல் 
   உயிர்ப்பித்து விடும் 
   துடிப்பை மறந்த  இதயம் !!?

ஒரே நொடியில்....!

வரும்போது... 
குழந்தைக்கு மறக்காமல் 
வாங்கி வந்த சாக்லேட் !
நைட் ஷோ 
மனைவியுடன் எந்திரன் பார்க்க 
வாங்கி வந்த டிக்கெட் !
நாளை 
செல்ல வேண்டிய 
முக்கிய உறவினரின் திருமணம் !
தீபாவளியை 
சிறப்பாய் கொண்டாட 
வாங்கிய புது உடைகள், 
பட்டாசுகள், இனிப்புகள் !
அடுத்த மாதம் செல்ல 
ஏற்பாடு செய்திருந்த
வெளிநாட்டு பயணம் !
கொஞ்ச நேரத்தில் 
கலந்து கொள்ளவிருந்த 
நண்பரின்  பிறந்த நாள் பார்ட்டி ! 
எல்லாம் எல்லாம் 
தூள் தூளாய் 
சிதைந்து  விட்டது ஒரே நொடியில் ?!
திட்டமிடப்படாத கொலையால்
..............
..............
..............
விபத்து !!






நாளை......!

  
  
  ஒரு புன்னகை, ஒரு சொல் 
  ஒரு பார்வை.....
  எதிர்பார்ப்பு  அதீதம் தான்
  சிறுபிள்ளைதானோ  நான்..?! 
  சில்லுசில்லாய் சிதறடித்தும் 
  சிதறவில்லை என் மனம்  !
  முள்ளு முள்ளாய் குத்தியும்
  கிழியவில்லை என் இதயம் !
  துண்டுதுண்டாய் வெட்டியும் 
  உடையவில்லை என் காதல் !
  உன் பொறுமையும் என் 
  வெறுமையும் நல்லதே !!
  ................... 
  நாளை
  கல்லறையின் மேல் 
  காத்திருக்கும் உனக்கான
  என் வார்த்தை !!
  காற்றில் கலந்திருக்கும்  
  சுவாசம் உணர்த்தும்
  மறந்த என் அன்பை....!!
  கண்ணீர் வழிந்தோடிய 
  தடம் பார்ப்பாய்
  நீ திரும்பும் வழியில் !!
  வீடு வந்த பின்னும் 
  தேடுவாய், நீ தவறவிட்ட 
  என்னை...!!?  


என் காதலே...!

     
     
     அடிக்கடி சோம்பி நிற்கும்
     என் மௌனங்கள் - மௌனத்தில் 
     விளங்காத என் காதல்...
     வார்த்தைகளில்
     எங்ஙனம் விளங்கும்....?!
     விதி வலியதாம் - அதைவிட
     வலியதே உன் அறியாமை !
     என் தவிப்பின் கணம்
     உணராமல் போனதென்ன !?
     புரியாக் காதலை எனக்கு
     அடையாளம் காட்டிவிட்டு
     முடிந்தது வேலை என்றே
     ஒதுங்கி போகிறாய் !
     கற்பனைகள் உடையலாம்
     சோப்பு குமிழியாய்...!
     கனவுகள் கலையலாம்
     மேக கூட்டமாய்....!
     உன் நினைவுகள்
     துருபிடித்துக்  கொண்டதே
     எப்படி கலையும்....??
     எப்படி மறையும் ....??

**************************************************************
        
  நேற்று, இன்று மறந்து
  உருவம், பருவம் கடந்து
  தர்க்கம், வர்க்கம் துறந்து
  கள் குடித்த வண்டாய் 
  தள்ளாடி தள்ளாடி பறந்து 
  கொண்டே இருக்கிறேன்..!!
  சரியா... ? தவறா....?
  சரியான ஒரு தவறா..?!!