என்னவனே....!


     இரவில் தூங்கும் முன்
     ரகசியமாய் ஒருமுறை
     உன் பெயர் உச்சரித்தே
     இதழ்கள்  மூடுகிறேன்....!
     ஆழமாய் ஒருமுறை
     உன் முகம் பார்த்தே
     விழிகள் மூடுகிறேன்...!
     ...........
     ...........
     தூங்கியவள்
     தூங்கியே விட்டால்.....?
     கடைசியாய்
     உச்சரித்தது, பார்த்தது
     உன் பெயராய், உன் முகமாய் 
     இருக்கட்டுமே.....!!
     


மனிதனாய்.....!

               
               இஸ்ரேலில் நடந்தாலும்
               இலங்கையில் நடந்தாலும்
               இழப்புகள் இழப்புகள் தான்....
               இறப்பவர்கள் யாராக இருப்பினும் 
               ஒரு தாயின் பிள்ளைகள் அன்றோ ?!
               நிறுத்தப்படுமா மனித அழிப்புகள் ?
               போர்களும், குண்டுகளும் யாருக்காக...?
               எதற்காக....? ஏன்.....? 
               தனிப்பட்ட விருப்பு வெறுப்பா ?
               விரோதமா....? 
               தன் வீடு மட்டும் பாதுகாப்பில்
               என்ற சுயநலமா ?
               நாளை பீரங்கி திரும்பும்
               உன் வீட்டையும் நோக்கி !?
               குண்டுகள் பாயும் உன் மீதும் ! 
               செத்து தானே ஆக வேண்டும்
               கத்தி எடுத்தவன் கத்தியால்...!!?
               எதை பெற இந்த போராட்டம்
               எல்லாம் இழந்தும்....!?
                ..............
                ...............
               அறுபது ஆண்டுகள் தான்
               சராசரி  ஆயுள்.....
               வாழ்ந்து விடுவோம்
               சாவதற்கு முன் கொஞ்சம்
               மனிதனாய்,  மனித நேயத்துடன்  !!



யோசி....!



               மலை, காற்று, கடல்
               என்றும் உணர்த்துவதில்லை 
               தன் இருப்பை......!


               மலை 
               கம்பீரமாய் நின்றிருப்பதை
               ரசித்ததில்லை நாம் 
               கொதித்து  தன் உள்ளக்கிடங்கை
               வெளியிடும் ஒருநாள் 
               சீறும் எரிமலையாய் ! 


              காற்று
              தென்றலாய் வீசியும் அதில்
              லயிப்பதில்லை நாம்
              வெறுத்துப் போய் 
              சுழன்றடித்து  ஒருநாள் 
              புயலாய் ! 


             கடல் 
             அழகாய் அலை நடை பயின்றும்
             கண்டுகொள்வதில்லை  நாம்
             பொறுமை இழந்து ஒருநாள் 
             பொங்கி கொந்தளிக்கும்  
             பேரலையாய் ! 


             உன்னிடம் இருக்கும் 
             என்
             இருப்பையும் 
             உணரவில்லை நீ !
             எரிமலையாய், புயலாய்,பேரலையாய்
             விரைவில் 
             என் நேசமும்....!!?







அழகு தேவதை நீ....!


நீ சிரிக்கும் போது சிதறிய முத்துக்களை அள்ளி
எடுத்தே கை வலித்திருக்குமோ
சிவந்திருக்கிறது  
உன் அன்னையின்  கை !


கவிதைகள்  சொல்லிவிட்டது  என்னிடம்
அந்த ரகசியத்தை
நீ பிறந்த  பின்பே  கவி  புனைய 
தொடங்கினாராம்  உன் தந்தை !


உன் மென் பட்டு பாதம் கண்ட மேக கூட்டம்
இறங்கி வந்து நீ நடக்க
பாதை அமைத்திட்டதோ
துணை இன்றி தவிக்கிறது வானம் !  


குயில்கள்  உன் மழலை மொழி  கேட்டு
தன்  மொழி  மறந்து 
திரிகின்றனவோ
ஆட மறுத்து அலையும் மயில்கள் !


படபடக்கும் உன் விழி பார்த்து
உன்னிடம் பாடம் பயில
வந்துவிட்டதோ  
தோட்டத்தில் காணவில்லை  வண்ணத்து பூச்சிகள் !   


என் வீட்டு ரோஜாக்களும் கிளம்பி விட்டன உன்னை வாழ்த்துவதற்கு.....!!!



இன்று நண்பர் தேவா அவர்களின் மகள் அக்ஷயாவின் பிறந்த நாள்.   
அந்த அழகு மகளை வாழ்த்தி இந்த சிறிய கவிதை.
இன்று போல் என்றும் சுகமாய் வாழ வேண்டும் என்று அன்புடன் வாழ்த்துகிறேன்.













                                     

பிரியமே....!

   
                உன் 
                குரலின் கனிவு 
                பேச்சின் இனிமை
                காந்த விழி  வீச்சு
                உதட்டு சுளிப்பு
                இதழோர புன்னகை
                எண்ணும்போதே 
                நான் 
                இருப்பேன் அங்கே.....!!   
   
                உன் 
                வார்த்தைகளை 
                அணிந்திருக்கிறேன் 
                ஒவ்வொன்றாய் கோர்த்து 
                மாலையாக்கி !
                ஒலிக்கிறது 
                என் காதில் 
                நீ 
                பேசாத போதும் ! 
   
                புயல் வீசும் மனதால் 
                தடுமாறும்
                என்னை
                தாங்கிடும் நங்கூரமே ! 
                இருள் சூழ்ந்த இதயத்தின் 
                இருள்  
                நீக்கும் சுடரே !
                என் 
                நடையின் வழியே !
    
                வெகு 
                தூரத்தில் நீ 
                இருந்தும்
                உன் தோள் 
                சாய்கிறேன் இங்கே.....!!?


*****************************************************



துளிகள்....!





செல்லும் இடமெல்லாம் 
என்னை கேளாமல் 
தொடரும் என் கால்கள் !
தெரிந்தும்  
திரும்பி பாரா
கல்நெஞ்சக்காரன் நீ !!


பாறைக்குள்
தேரை !
உனக்குள் 
என் காதல் !



நீ புனையும் 
கவிதையின் 
முற்று புள்ளி 
நான் !?


சாலையில் செல்லும்போது 
கூர்ந்து பார்....
கூட்டத்தில் ஒருத்தியாய்
நானிருப்பேன் !


மணம் இல்லை 
என் காதலில் 
கனவில் பூத்த 
பூவே  நீ !  


உரத்த சத்தம், உரத்த இசை 
உரத்த சண்டை எதிலும் 
மிகையே இயல்பாய் !?
மௌனம் ஒரு வேதம் 
படிக்க சற்று சிரமம்
புரிந்த பின் வெளிச்சம் !!


********************************************************

விடை கொடு....!

       
        இருவரும் விடை பெறுவோம்
                                           
        பிரிவிற்காக , ஒருவரிடம் இருந்து ஒருவர்...!
                                           
        காதுகளுக்குள் கேட்ட
                                           
        உன் குரலின் இனிய ரகசியங்களை, 
                                           
        சிலிர்ப்பை, வானத்தில் எறிந்து விட்டேன்...!
                                            
        உனது பாடல்களை, 
                                            
        கானல் வெளியில் மிதக்க விட்டிருக்கிறேன்....!
                                            
        முதன்முதல் நீ தந்த  முத்தத்தை,  
                                            
        ஒரு  உணவாக சாப்பிட்டாகிவிட்டது!
                                            
        எதுவுமில்லை  உன் அடையாளங்கள்!!? 

        ஆனால்  என்னை கொஞ்சி அழைத்த கணங்கள் 
                                             
        நினைவெல்லாம் வண்ணத்துபூச்சியாய்
                                             
        பறந்து திரிவதை
                                             
        எப்படி கொல்வது...?

***********************************************************************************

       இனி
       கவிதை எழுத கூடாது
       உன்னை எண்ணி.....
       சபதம் எடுக்கிறேன் 
       நிதமும் !
       
அனைத்தும் 
       ஒரே நொடியில்
       மறந்து விடுகிறது 
       உன் குரல் கேட்ட 
       மறு நொடியில் !!?