பிழையாய் நீ...!



  எனக்கு அலுக்கவில்லை 
  இந்த காதலும்...கவிதையும் !


  நம் இரு விழிகள் சந்தித்தபோது 
  மனதில் பூ பூக்கவில்லை !
  என் பெயர் சொல்லி அழைத்த போது 
  பட்டாம்பூச்சிகள் பறக்கவில்லை என்னுள் !
 
  உன்னை எண்ணி உறங்கியபோதும்
  கனவில் நீ இல்லை !
  என்னை பிடித்திருக்கிறது என்ற போதும்
  வானில் மிதக்கவில்லை மனது !


  நான் அங்கே இருக்கிறேன் குறிப்பால் நீ 
  உணர்த்தியும் மௌனம் காத்தேன் !
  கவிதை ஒன்றை எழுதி முடித்தேன் ....
  கவிதை சொன்னது இது காதல்...!!


  அன்றில் இருந்து தொடர்கிறது 
  இந்த காதலும் கவிதையும்.....
  கவிதையில் இலக்கணம் இல்லை 
  நீ இருக்கிறாய் இலக்கண பிழையாய் !?


  ****************************************************


  தினம்  உன் முகம் பார்த்து  
  உறங்க செல்லும் எனக்கு 
  ஒரு நாளும் விடை 
  கொடுத்தது இல்லை நீ !!?







 அடுத்தது 'இனியது காதல்' தொடர்....காத்திருங்கள்....!!



தேடல்......!



  

  காணவில்லை எனது  ஊர்....!?
  ஆடி கூடி மகிழ்ந்து வாழ்ந்த ஊர்
  பாவாடையில் ஒட்டிய மண்
  இன்னும் ஈரத்துடன் வாசமாய்  ! 
  என் தாய் அழைத்த குரல் 
  இன்னும் கேட்கிறது காற்றில் ! 

  என் நினைவோடும் உணர்வோடும்
  வாழ்வோடும் கலந்திருந்த ஊர்
  இன்று காணவில்லை....!? 
  மரங்கள் கோயில்கள் வீடுகள்
  தெருக்கள் பள்ளிகூடங்கள் கட்டிடங்கள்
  பாலங்கள் குளங்கள் கடைகள்
  ஏதும் இல்லை....!?

  போரால் பழிவாங்கப்பட்ட ஊர் 
  சாட்சியாய் பரந்த வெளி !
  எல்லா நினைவுகளுக்கும் 
  சாட்சியமற்ற பரந்த வெளி !
  
  மிச்சமாய்   
  அழிவின் சுவடுகள்
  என் உறவில் நான் மட்டும் !
  இன்றைய 
  ஒரே தேடல் என் ஊர் !

  போரென்றால் அழிவு நிதர்சனம்
  குண்டுவீச்சில் சிதைவு யதார்த்தம்
  ஊர் காணவில்லை எப்படி ?
  எங்கே போனது என் ஊர் ?

  உணவுக்கு மாற்றாய்
  தட்டில் நிறைந்த துயரம் ! 
  எதுவும் இல்லாத போதும்
  எல்லாம் இழந்த போதும் 
  வாழ்ந்தாக வேண்டுமே !!

  ****************************************

   ஈழம்
  ஆளும் கட்சிக்கு  உண்ணாவிரதம் 
  எதிர்கட்சிக்கு அறிக்கைகள் 
  பத்திரிகைக்கு சில நாள் செய்திகள் 
  என் போன்றோருக்கு கவிதைகள் !?





நினைவுகள்....!

    
      கொட்டும் மழை 
      சில்லென்ற காற்று 
      நடுங்க வைக்கும் குளீர்
      எதுவும் 
      பாதிக்கவில்லை !
      மனதில் நெருப்பாய் 
      உன் நினைவுகள் !!


     
      நீ
      ரோஜாவை 
      பறித்தபோது 
      வலித்தது எனக்கு !
      உன்
      கையில்  
      முள் குத்தியபோது
      சிரிக்கிறது
      என் வலி !!


      
      காலி கோப்பையை
      பருகக் கொடுத்தேன்
      தேநீர் என்று !
      ரசித்து குடித்து  
      சொல்கிறாய் 
      நன்றி !
      வெட்கத்தில் 
      பூக்கத் தொடங்கியது 
      காதல் !!







என்னவனே....!


     இரவில் தூங்கும் முன்
     ரகசியமாய் ஒருமுறை
     உன் பெயர் உச்சரித்தே
     இதழ்கள்  மூடுகிறேன்....!
     ஆழமாய் ஒருமுறை
     உன் முகம் பார்த்தே
     விழிகள் மூடுகிறேன்...!
     ...........
     ...........
     தூங்கியவள்
     தூங்கியே விட்டால்.....?
     கடைசியாய்
     உச்சரித்தது, பார்த்தது
     உன் பெயராய், உன் முகமாய் 
     இருக்கட்டுமே.....!!
     


மனிதனாய்.....!

               
               இஸ்ரேலில் நடந்தாலும்
               இலங்கையில் நடந்தாலும்
               இழப்புகள் இழப்புகள் தான்....
               இறப்பவர்கள் யாராக இருப்பினும் 
               ஒரு தாயின் பிள்ளைகள் அன்றோ ?!
               நிறுத்தப்படுமா மனித அழிப்புகள் ?
               போர்களும், குண்டுகளும் யாருக்காக...?
               எதற்காக....? ஏன்.....? 
               தனிப்பட்ட விருப்பு வெறுப்பா ?
               விரோதமா....? 
               தன் வீடு மட்டும் பாதுகாப்பில்
               என்ற சுயநலமா ?
               நாளை பீரங்கி திரும்பும்
               உன் வீட்டையும் நோக்கி !?
               குண்டுகள் பாயும் உன் மீதும் ! 
               செத்து தானே ஆக வேண்டும்
               கத்தி எடுத்தவன் கத்தியால்...!!?
               எதை பெற இந்த போராட்டம்
               எல்லாம் இழந்தும்....!?
                ..............
                ...............
               அறுபது ஆண்டுகள் தான்
               சராசரி  ஆயுள்.....
               வாழ்ந்து விடுவோம்
               சாவதற்கு முன் கொஞ்சம்
               மனிதனாய்,  மனித நேயத்துடன்  !!



யோசி....!



               மலை, காற்று, கடல்
               என்றும் உணர்த்துவதில்லை 
               தன் இருப்பை......!


               மலை 
               கம்பீரமாய் நின்றிருப்பதை
               ரசித்ததில்லை நாம் 
               கொதித்து  தன் உள்ளக்கிடங்கை
               வெளியிடும் ஒருநாள் 
               சீறும் எரிமலையாய் ! 


              காற்று
              தென்றலாய் வீசியும் அதில்
              லயிப்பதில்லை நாம்
              வெறுத்துப் போய் 
              சுழன்றடித்து  ஒருநாள் 
              புயலாய் ! 


             கடல் 
             அழகாய் அலை நடை பயின்றும்
             கண்டுகொள்வதில்லை  நாம்
             பொறுமை இழந்து ஒருநாள் 
             பொங்கி கொந்தளிக்கும்  
             பேரலையாய் ! 


             உன்னிடம் இருக்கும் 
             என்
             இருப்பையும் 
             உணரவில்லை நீ !
             எரிமலையாய், புயலாய்,பேரலையாய்
             விரைவில் 
             என் நேசமும்....!!?







அழகு தேவதை நீ....!


நீ சிரிக்கும் போது சிதறிய முத்துக்களை அள்ளி
எடுத்தே கை வலித்திருக்குமோ
சிவந்திருக்கிறது  
உன் அன்னையின்  கை !


கவிதைகள்  சொல்லிவிட்டது  என்னிடம்
அந்த ரகசியத்தை
நீ பிறந்த  பின்பே  கவி  புனைய 
தொடங்கினாராம்  உன் தந்தை !


உன் மென் பட்டு பாதம் கண்ட மேக கூட்டம்
இறங்கி வந்து நீ நடக்க
பாதை அமைத்திட்டதோ
துணை இன்றி தவிக்கிறது வானம் !  


குயில்கள்  உன் மழலை மொழி  கேட்டு
தன்  மொழி  மறந்து 
திரிகின்றனவோ
ஆட மறுத்து அலையும் மயில்கள் !


படபடக்கும் உன் விழி பார்த்து
உன்னிடம் பாடம் பயில
வந்துவிட்டதோ  
தோட்டத்தில் காணவில்லை  வண்ணத்து பூச்சிகள் !   


என் வீட்டு ரோஜாக்களும் கிளம்பி விட்டன உன்னை வாழ்த்துவதற்கு.....!!!



இன்று நண்பர் தேவா அவர்களின் மகள் அக்ஷயாவின் பிறந்த நாள்.   
அந்த அழகு மகளை வாழ்த்தி இந்த சிறிய கவிதை.
இன்று போல் என்றும் சுகமாய் வாழ வேண்டும் என்று அன்புடன் வாழ்த்துகிறேன்.