நீயும் நானும்...!




      உலகம் மறந்து நாம் பேசி 
      கொண்டிருக்கும் நேரங்களுக்கு 
      சாட்சியாய் தூரத்தில் 
      அந்த ஒற்றை நிலா !

      கம்பீரம் உள்ளடக்கிய  கனிவான 
      உன் குரல் கேட்டு கண் சிமிட்டி
      நட்சத்திரங்கள் தங்களுக்குள் 
      சிரித்து கொள்கிறதே !

      மலர்ந்து வெகு நேரமான
      நித்தியமல்லியின் நறுமணம் 
      நாசி துளைத்து நானும் இருக்கிறேன்
      என்று நினைவு படுத்துகிறதே !

      குளிரும் மெதுவாய் தொட்டு  
       உடல் தழுவி மாதம்  மார்கழி
       என்று சிலிர்த்து  குறிப்பால்   
       உணர்த்துகிறதே !

       தோட்டத்து மரத்தில்   
       இரு காதல் பறவைகள்
       ரகசியமாய் பேசும் பேச்சுக்கள் 
       நம்மை பற்றியதாக இருக்குமோ ?!

       இருந்தும் என் கவலை எல்லாம் 
       'வந்தேன் நான்' என சூரியன் 
       குரல் கொடுத்துவிடுமோ    
       என்ற யோசனையில் இருக்கிறது !

       மெதுவாய் நான்  போகட்டுமா என வினா எழுப்ப 
       போகணுமா என்ற வினாவே உன் பதிலாய் வர 
       வெட்கத்துடன் உரையாடல் மீண்டும் 
       இடைவெளி இன்றி தொடருகிறது.....!!  



  

காதல் பூ...!



                                           யுக யுகமாய்  தேடித் தேடி
                                           விழிகளால் சேர்த்து...
                                           இதயத்துள் சேமித்து...
                                           வைத்திருந்த 
                                           கனவுகளை...
                                           ஏக்கங்களை...
                                           தவிப்புகளை...
                                           மொத்தமாய் மொழி பெயர்க்க
                                           இந்த ஒரு இரவு போதாது...!!

                                           

                                           உன் மீதான என் காதல்
                                           சட்டென்று பற்றிக்கொண்ட 
                                           காதல்  தீ அல்ல !
                                           அவசரம் இன்றி
                                           சிறிது சிறிதாய்...
                                           துளி துளியாய்...
                                           இலை இலையாய்...
                                           மெல்ல மெல்ல...
                                           பயணித்து 
                                           இதழ் இதழாய்...
                                           எனக்குள் மலர்ந்த காதல் பூ !

                                         





என் சௌந்தரியமே...!


   வரைய தூரிகை எடுத்தேன் 
   வரைய மறுத்து
   வடிக்கிறது 
   உனக்கு ஒரு கவிதை ! 

   பாசத்தையும்  பரிவையும்  
   பாச கயிறாக்கி   
   என் நெஞ்சோடு 
   பிணைத்தாய் இறுக்கமாய் !  

   நீ பிறந்தாய் 
   உன் தாயின் மகனாக
   நான் பிறந்தேன் 
   என் தாயின் மகளாக

   இணையத்தால் இணைந்தோம்
   ஒரே தாயின் பிள்ளைகளாய் !
   இணைத்தது இறைவன் என்கிறேன் நான்
   விதி என்று சொல்லி சிரிக்கிறாய் நீ ! 

   வீட்டிற்கு வந்தேன்  உன்னை காண 
   தயங்கி வாசலுடன் திரும்பினேன் 
   சிறகொடிந்து  நீ  
   நிற்பதை  காண சக்தி அற்று !

   என்றாவது ஒரு நாள் என் வாசல் 
   வருவாய் நடந்து ! 
   அந்நாளும் வந்திடாதோ 
   என் மனமும் குளிர்ந்திடாதோ !


   என் மேல் நீ காட்டும் பாசம் 
   கண்டு என்னுள்ளம் கலங்குகிறது 
   என் பிள்ளையாய் நீ 
   பிறந்திருக்க கூடாதா என்று !! 


   என் சௌந்தரியமே
   உரக்க ஒருமுறை அழைத்திடு
   அம்மா என்றே
   பாலையிலும் பூ பூக்கட்டும் !!





'இனியது காதல்' தொடர் 2


காதலை பற்றி தொடர் எழுதத் தொடங்கியதும் புதிதாய் காதலிப்பவர்களை போல எனக்குள்ளும் பட்டாம்பூச்சிகள் பறக்கத்தொடங்கி விட்டது என்றால் பார்த்து கொள்ளுங்கள் காதலின் வீரியத்தை...! காதல் என்பது வயதை, இயல்பை மறக்க செய்யும் !!

"நாம் எதில் வேண்டாம் என்று தீர்மானமாக  இருக்கிறோமோ அதை சோதிக்கவே பல காரியங்கள் இயற்கையாக  நடைபெறும்" காதலுக்கும் இது ரொம்பவே பொருந்தும்.

(இந்த தொடரை மேலும் தொடருவதற்கு முன் சில விளக்கங்கள். தொடரின் முதல் பதிவிற்கு வந்த கமெண்ட்ஸ் வச்சி பார்க்கிறப்போ காதல் வந்தால் பெத்தவங்களை பகைச்சிட்டு ஓடி போய்டுவாங்க, இது உடலை மட்டுமே சார்ந்தது, உண்மையான காதல் என்று ஏதும் இல்லைன்னு சொல்லி இருந்தாங்க....!!? நாட்டில காதலால் நொந்தவங்க தான் பாதி பேர் என்று நினைக்கிறேன்)

நான் இந்த தொடரில் சொல்ல இருப்பது அழகான மென்மையான காதல் உணர்வை பற்றியது  மட்டும்தான். மனதை என்றும் இளமையாகவே வைத்திருக்கும்  காதலை பற்றி மட்டுமே இங்கே பேசுவோமே....! காதலர்கள் செய்யும் தவறுக்கு காதல் என்ன செய்யும்....?

 'காதல் ஒரு போதும் தோற்பதில்லை' 'காதலர்கள் தான்  தங்களுக்குள் தோற்று போகிறார்கள் !!'

எனக்குள் எப்போதும்  இருக்கும் கர்வம் , கோபம், பிடிவாதம், வைராக்கியம், குரலில் எப்போதும் தொனிக்கும் ஆணவ தொனி அனைத்தும், காதல் என்னை அழைத்த மறுநொடியில் அப்படியே மறைந்து மண்டியிட்டு விழுந்து விடும் அதன் காலடியில், எந்த நிபந்தனையும் இன்றி.......!! ஒரு முறை இரு கண்களையும்  மூடி மெதுவாய் 'காதல்' என்று சொல்லி பாருங்கள்...... உடம்பில் ஒரு சிலிர்ப்பு மெதுவாய் பரவுவதை உணர முடியும்....


இதை காமம் என்று எள்ளி நகையாடி வசைபாடுகிறது ஒரு கூட்டம். அந்த கூட்டம் ஒன்று காதலில் தோற்றவர்களாக இருக்க வேண்டும் அல்லது  காதல் கிடைக்காமல் ஏங்குபவர்களாக இருக்க வேண்டும். அனைவருமே ஏதோ ஒரு சமயத்தில் காதல் வயப்பட்டு இருந்திருப்பார்கள்....! மனிதர்கள் பிறப்பதற்கு காதல் ஒரு வேளை காரணமாக இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் மனிதனாய் வாழ நிச்சயம் ஒரு காதல் வேண்டும்.

பலருக்கும் தங்களின் முதல் காதல் இன்றும் ஸ்பெஷல் பொக்கிஷம் தான். அதை நினைக்கும் போதெல்லாம் மனதில் ஒரு துள்ளல் எழத்தான் செய்யும். பதின்ம வயதில் ஏற்படும் இனக்கவர்ச்சியாக இருந்தாலுமே அதிலும் கொஞ்சமாவது  ஒரு காதல் இருக்கத்தானே செய்யும்.....கொட்டும் மழையும் இதம் தான், சுட்டெரிக்கும் வெயிலும் குளுமைதான்.....!

காதலை பார்க்கும் பார்வைகள் வேறு படலாம்...ஆனால் காதல் மட்டும் அதே அழகுடன்,  அதே துள்ளலுடன், அதே பரவசத்துடன், அதே இனிமையுடன், அதே இளமையுடன் நித்திய கன்னியாக இருக்கிறது.

காதல் மனிதர்களிடம் மட்டும் இல்லை செடி கொடிகள் விலங்குகள்,பறவைகள் இனத்திலும் காதல் உண்டு. எல்லோருக்கும் தெரிந்து இருக்கலாம், இருந்த கொஞ்ச நீரையும் தன் துணை அருந்தட்டும் என்று விட்டுக்கொடுத்த 'மான்கள் கதை'யை.....!இறுதிவரை இரண்டுமே ஒன்றுக்காக ஒன்று விட்டு கொடுத்து நீர் அருந்தவில்லை. குளத்தில் இருந்த சிறிய அளவு நீரும் அப்படியே குறையாமல் இருந்தது, அவை ஒன்றின் மேல் ஒன்று வைத்திருந்த காதலால் தான் !!

" நீரில் வாழும் அன்றில் பறவைகள் இணைந்தே நீந்தும், இணைந்தே இரையுண்ணும். ஒருமுறை நீந்தும் போது நீர் பூ ஒன்று நடுவில் குறுக்கிட்டுவிட்டது. பூவின் அகலம் கொஞ்சமே, சுற்றி வர இடைப்பட்ட நேரம் ஒரு நொடியே...ஆனால் அந்த அன்றில்கள் பல ஆண்டுகாலம் பிரிந்து விட்டது போன்று வருந்தினவாம்...! " என்னே அதன் அன்பு ! அதற்குள்ளும் காதலை வைத்து இருக்கும் இயற்கையை வியக்காமல் இருக்க இயலவில்லை...!

ஒரு ஜென் கவிதை

காதலன்

அன்பே !
இன்று இரவுக்குள் நான் சாகப் போகிறேன்
எனக்குத் தெரியும்
விடியலில் முதல் ஒளிக்கீற்றாய்
நீ வருவாய் !

காதலியின் பதில்

அன்பே !
இந்த இரவுக்குள் நீ சாகப் போகிறாய்
அந்தியின் முதல் இருளாய்
நான் வருவேன் !

இதுதான் காதலோட அழகான உண்மையான சுத்தமான அன்பு ! தூய அன்பு இப்படி தான் இருக்கும் !

காதல் வந்தால் கவிதை எழுதியே ஆக வேண்டும் இது காதலின்  கட்டளை மீற முடியாதே....! காதலில் சோகம் என்றால் கவிதைகள் இப்படியும் எழுதப்படலாம்...!

நேற்று 
என்  விழிகள் சிரித்தது 
உன் இதழோர புன்னகையில்  
இன்று 
விழிகள் நீர் வார்க்கிறது 
அது ஏளன சிரிப்போ என்ற
சந்தேகத்தில் !?

நேற்று இன்று 
ஒரே வித்தியாசம் 
நேற்று வாழ்ந்தேன் 
இன்று மடிந்தேன் 

எனது மரணமோ 
உன் வருகை நாளோ 
எது முன்பு வந்து 
என்னை அழைத்திடுமோ !  

சாவின் 
கடைசி நொடியில்
காதலி...
'வேறு யாரும் என் அளவிற்கு
உன்னை காதலிக்க முடியாது'

சாகும் போதும் ஒரு காதலிக்கு எவ்வளவு நம்பிக்கை தன் காதலின் மீது...!

அந்தஸ்து, படிப்பு, வயசு, உடம்பு, அழகு இதெல்லாம் அன்புக்கு ஒரு தடை  கிடையாது....!

இந்த கவிதைகள் உங்கள் மனதை கொஞ்சமேனும் தொட்டு இருந்தால் புரிந்து கொள்ளுங்கள், உங்கள் மனதின் ஓரத்திலும் சொல்லபடாத ஒரு காதல், ஒரு நேசம்  ஒளிந்திருக்கலாம்.......! சொல்லி விடுங்கள்....சொல்லி விட்டு மனதை சுத்தப்படுத்தி கொள்ளுங்கள்.....!!



பின் குறிப்பு....

நீண்ட நாள் சொல்லாமல் இருந்து கடைசியில், சொல்லிய அன்றே மனம் சுத்தமான 'ஒரு உண்மை காதல்' ஒன்று இருக்கிறது.....! அதை பற்றி தொடரும் தொடரில் சொல்கிறேன்....


மீண்டும் சந்திப்போம் காதலில்....!


பிழையாய் நீ...!



  எனக்கு அலுக்கவில்லை 
  இந்த காதலும்...கவிதையும் !


  நம் இரு விழிகள் சந்தித்தபோது 
  மனதில் பூ பூக்கவில்லை !
  என் பெயர் சொல்லி அழைத்த போது 
  பட்டாம்பூச்சிகள் பறக்கவில்லை என்னுள் !
 
  உன்னை எண்ணி உறங்கியபோதும்
  கனவில் நீ இல்லை !
  என்னை பிடித்திருக்கிறது என்ற போதும்
  வானில் மிதக்கவில்லை மனது !


  நான் அங்கே இருக்கிறேன் குறிப்பால் நீ 
  உணர்த்தியும் மௌனம் காத்தேன் !
  கவிதை ஒன்றை எழுதி முடித்தேன் ....
  கவிதை சொன்னது இது காதல்...!!


  அன்றில் இருந்து தொடர்கிறது 
  இந்த காதலும் கவிதையும்.....
  கவிதையில் இலக்கணம் இல்லை 
  நீ இருக்கிறாய் இலக்கண பிழையாய் !?


  ****************************************************


  தினம்  உன் முகம் பார்த்து  
  உறங்க செல்லும் எனக்கு 
  ஒரு நாளும் விடை 
  கொடுத்தது இல்லை நீ !!?







 அடுத்தது 'இனியது காதல்' தொடர்....காத்திருங்கள்....!!



தேடல்......!



  

  காணவில்லை எனது  ஊர்....!?
  ஆடி கூடி மகிழ்ந்து வாழ்ந்த ஊர்
  பாவாடையில் ஒட்டிய மண்
  இன்னும் ஈரத்துடன் வாசமாய்  ! 
  என் தாய் அழைத்த குரல் 
  இன்னும் கேட்கிறது காற்றில் ! 

  என் நினைவோடும் உணர்வோடும்
  வாழ்வோடும் கலந்திருந்த ஊர்
  இன்று காணவில்லை....!? 
  மரங்கள் கோயில்கள் வீடுகள்
  தெருக்கள் பள்ளிகூடங்கள் கட்டிடங்கள்
  பாலங்கள் குளங்கள் கடைகள்
  ஏதும் இல்லை....!?

  போரால் பழிவாங்கப்பட்ட ஊர் 
  சாட்சியாய் பரந்த வெளி !
  எல்லா நினைவுகளுக்கும் 
  சாட்சியமற்ற பரந்த வெளி !
  
  மிச்சமாய்   
  அழிவின் சுவடுகள்
  என் உறவில் நான் மட்டும் !
  இன்றைய 
  ஒரே தேடல் என் ஊர் !

  போரென்றால் அழிவு நிதர்சனம்
  குண்டுவீச்சில் சிதைவு யதார்த்தம்
  ஊர் காணவில்லை எப்படி ?
  எங்கே போனது என் ஊர் ?

  உணவுக்கு மாற்றாய்
  தட்டில் நிறைந்த துயரம் ! 
  எதுவும் இல்லாத போதும்
  எல்லாம் இழந்த போதும் 
  வாழ்ந்தாக வேண்டுமே !!

  ****************************************

   ஈழம்
  ஆளும் கட்சிக்கு  உண்ணாவிரதம் 
  எதிர்கட்சிக்கு அறிக்கைகள் 
  பத்திரிகைக்கு சில நாள் செய்திகள் 
  என் போன்றோருக்கு கவிதைகள் !?





நினைவுகள்....!

    
      கொட்டும் மழை 
      சில்லென்ற காற்று 
      நடுங்க வைக்கும் குளீர்
      எதுவும் 
      பாதிக்கவில்லை !
      மனதில் நெருப்பாய் 
      உன் நினைவுகள் !!


     
      நீ
      ரோஜாவை 
      பறித்தபோது 
      வலித்தது எனக்கு !
      உன்
      கையில்  
      முள் குத்தியபோது
      சிரிக்கிறது
      என் வலி !!


      
      காலி கோப்பையை
      பருகக் கொடுத்தேன்
      தேநீர் என்று !
      ரசித்து குடித்து  
      சொல்கிறாய் 
      நன்றி !
      வெட்கத்தில் 
      பூக்கத் தொடங்கியது 
      காதல் !!