Posted by
Kousalya Raj
comments (7)
வேண்டாம் என்று
புறந்தள்ளும் போதெல்லாம்
வலுகட்டாயமாகத் திணித்து
விடுகிறார்கள் எதையாவது
தெரியாது என
ஒப்புக் கொண்டாலும்
பிடிவாதமாய் சொல்லித்
தருகிறார்கள் தெரிந்ததையே
பிடிக்கவில்லை என
நகர்ந்தாலும் பிடித்துத்தான்
ஆகவேண்டும்
வலிந்து பிரியத்தைக் கொட்டுகிறார்கள்
முடியாது என
மறுத்தாலும் ஏன் முடியாது
முடியும் என்று சொல்
உபதேசிக்கத் தொடங்கி விடுகிறார்கள்
நான் முடிக்க நினைக்கையில்
சரியாக எவரோ ஆரம்பித்துவிட
எனதியல்புகள்
என்பதெல்லாம் இல்லாததாகி
தொலைவதா
தொலைப்பதா யோசித்துத்
தொலைப்பதற்குள்
'வா போகலாம்' கைப் பற்றி
யாரோ இழுக்க
இதோ கிளம்பிவிட்டேன்
முற்றிலுமாக
என்னைத் தவிர்த்துவிட்டு...
Labels:
அனுபவம்
,
கவிதை மாதிரி
Posted by
Kousalya Raj
comments (6)
பிரியங்களை கோர்த்து
ஒரு வாழ்த்துச்சொல்ல
வார்த்தைகளை தேடித்தேடி
களைத்துப் போனேன் நான்
ஏதோ கையில் கிடைத்த எழுத்துக்களை
இதோ வரிகளாக்குகிறேன்
பிழை இருப்பினும்
ஏற்றுக் கொள்
அவை பிழைகள் அல்ல
என் பிரியங்கள் என...
வார்த்தைகளுக்குள்
நீ அடங்குவதும்
அதற்குள் உன்னை
அடக்குவதும்
அவ்வளவு எளிதா என்ன...
யாரோடும் ஒப்பிட நீ
அவர் போல்
இவர் போல் அல்ல
நீ வேறானவன்
என் நல்லவை அனைத்திற்கும்
வேரானவன்...
நீ நேரானவன்
முழுமைக்குள் மூழ்கிக் கிடக்கும்
நிறைவானவன்...
பேசுபவன் அல்ல நீ
பேசப்பட வேண்டியவன் !
அசாத்தியமும்
சாத்தியம் உன்னிடத்தில்...
அசாதாரணங்கள்
சாதாரணமாவது உன்னிடமே...
உலகின்
அத்தனை வாழ்த்துகளும்
ஒட்டு மொத்தமாய்
ஒன்றுச் சேர்ந்து
வாழ்த்தட்டும் இன்று !!!
போராளி பேரொளியாய்
மின்னட்டும் என்றும்...!!!!
இனிய நண்பர் தேவாவிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள் !!
(குருவை ஒருமையில் குறிப்பிட்டதற்கு பொறுத்துக் கொள்க) :-)
Posted by
Kousalya Raj
comments (2)
அனல் வீசும் காட்டில்
எரிந்தும் எரியாமலும்
கசியும் புகை
காற்றில் வீசி
எறியப் பட்ட சருகுகள்
காட்டாற்றில்
பெருக்கெடுத்தோடுகிறது மணல்
கீச்சு கீச்சுக்களும்
குக்கூக்களும் கரைந்து
செவியருக்கிறது கோட்டான்களின்
ஊளைச் சத்தம்...
மாட்டிக்கொண்ட
விட்டு விலகிட முடியா
ஆலமர விழுதின் வேர் முடிச்சை
அவிழ்க்கவும் வெட்டவும் இயலும்
என்றபோதிலும்
இப்போதெனக்கு
வேண்டுமெனக்கு ஒரு தனிமை
என்னில் இருந்து
என்னைத் தவிர்த்த ஒரு தனிமை !
Posted by
Kousalya Raj
comments (4)
பேச விசயம்
இல்லாத போதும்
அடிக்கடி
பேசியாகணும்
உன்னிடம்
ஏதோ ஒன்றை பற்றியாவது
இதை
அதை
எதையாவது
தேடி ஓடுகிறேன்
அந்த ஏதோ ஒன்றை
கண்டுப் பிடிக்க...!
* * *
நான் தூங்க
முதலில் உன் நினைவுகளை
தூங்க வைக்கிறேன்...
மூடிய இமைகளுக்குள்
ஓடிப் பிடித்து விளையாடுகிறது
அதுவரை தூங்குவதாய்
நடித்துக் கொண்டிருந்த
உன் நினைவுகள்..!
* * *
ஊடலில் உண்டாம் இன்பம்
சண்டைக்கு காரணம் தேடி
உன் வார்த்தைகளுக்குள் ஓடி
தேடிக் கண்டுபிடித்து
உன் நெஞ்சுக்கு நேராய்
வீசிய அடுத்த நொடி
ஐயோ உனக்கு வலிக்குமே
பதறும் என்னை பைத்தியகாரியாக்கி
நீ சிரிக்கும் வேளையில்
சமாதானப்பூ பூத்து
கூடலில் முடித்து வைக்கிறது
* * *
சூழ்ந்த மேகங்களை
வேகவேகமாய் விலக்கி
மெல்ல எட்டிப்பார்க்கிறான்
கதிரவன்...
எனக்கேன்
உன் முகம் நினைவுக்கு வரணும் ?!
* * *
பேருந்தில்
கூட்டத்தோடு
முண்டியடித்து
எனக்கு முன்னால்
ஏறிச் சென்று
துண்டுப் போட்டு
ஜன்னலோரம்
இடம் பிடித்து வைக்கிறது
உன் நினைவுகள் !
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (1)
உனக்கு பிடித்த
உன் கற்பனைகளுக்குச் சிறகு தந்த
வாதாம் மரத்தின் அருகே
உன் சுவாசத்தின் ஒருத் துளி தேடி
அமர்ந்திருக்கின்றேன்
வெகு நேரமாய் ...
ஒன்றாய் நாம் திரிந்த வீதிகளில்
உன் நினைவுகளை ஏந்தி
தனியாய் அலையும் எனக்கு
ஒரு நம்பிக்கை இருக்கிறது
என்னை அழைத்து வந்த
அந்த ஏதோ ஒன்று
உன்னையும் இங்கே
அழைத்து வரும் என்று...
நீண்ட காத்திருப்புகள்
பதிலொன்றை என் மீது
வீசி எறிந்தது கேள்வியாக...
கடைசியாக நீ பேசிய
'புரிய முயற்சிச் செய்'
என்பதன் அர்த்தம்
'பிரிய முயற்சிச் செய்'
என்பதாக இருக்குமோ...?
ஒரு அத்தியாயம் ஒன்றின்
முடிவுரை எழுதி முடித்து
முடிந்து
பனிப் போர்வைக்குள்
தனித்து
நான் விறைத்துக் கிடக்கும்
வேளையில்
நீ என்னைக் கடந்து போகலாம்
அது நானென்று அறியாமல்
இது ஏதோவொன்று என...!
படம்- கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (4)
மழைத் துளிகளில்
ஒரு துளியாக
நீ ரசிக்கும்
வானவில்லின்
ஒரு நிறமாக
உன் கேசம்
கலைத்து விளையாடும்
காற்றாக
நீ நடக்கும்
பாதையோர
ஒற்றை புல்லாக
உன் பாதம் பட்டு
சரசரக்கும்
இலைச் சருகாக
நீ அணியும்
ஆடையின்
ஒற்றை இழையாக
நீ விரும்பி கேட்கும்
பாடலின்
ஒரு ஸ்வரமாக
உனது
கவிதைகளில்
முற்றுப்புள்ளியாக
நீ அருந்தும்
தேநீரின்
கடைசித் துளியாக
ஏதோ ஒன்றாகவேணும்
நானாக வேண்டும் !
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (3)
நினைத்தப் போது அழைப்பாய்
அழைத்தப் போது நினைப்பேன்
உன் கோபத்தை
நான் பார்த்ததில்லை
கோபம் தவிர வேறொன்றும்
நான் கொடுத்ததில்லை
'சாப்டியா' என கேட்க தவறமாட்டாய்
தவறியும் கேட்டதில்லை நான்...
காய்ச்சல் என்றதும்
நொடிக்கொரு முறை விசாரித்து
காய்ச்சலை விட அதிகம் படுத்தி எடுப்பாய்
உன் அக்கறை எனக்கு இம்சை
என் இம்சைகள் உனக்கு ரசனை
என் தேவைகள் உனக்கு அவசியம்
உன் விருப்பம் எனக்கு அனாவசியம்
உன் தத்துப்பித்து உளறல்களை
கவிதை என்பாய்
அட அசடே என்றெண்ணி
ஆஹா அற்புதம் என்பேன்
தனிமையில் என்னை
மூழ்கடித்தப் போதெல்லாம்
எங்கே என்று தேடிக்கொண்டிருப்பாய்
தேடுவாய் என்று தெரிந்தே
தொலைந்துப் போகிறேன் அடிக்கடி...
நிலவென்றாய்
உயிரென்றாய்
இரண்டெழுத்தில்
என் பெயர் சுருக்கி
அழுத்தமாய் உச்சரித்து
இது காதல் என்கிறாய்
இப்படி சொல்வதில் உனக்கு
இன்பம் என்றால்
இருந்துவிட்டுத்தான் போகட்டுமே
நமக்குள் காதல் !
படம் : கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (2)
இமைச் சிறகடித்து
பனியிதழ் விரித்து
அவன் சிரிக்கும் போதெல்லாம்
வானுக்கும் பூமிக்குமாய்
பயணிக்கிறது
எனது உயிர் !
* * *
பனியூறிய இதழ்
பனிச் சிதறல் சிரிப்பு
பனித் தூறல் சொற்கள்
பனிமூட்டம் அவனது அண்மை
பனிப்போர்வை அவனது மௌனம்
பனிப்பொழிவு அவனது நேசம்
பனிப்பார்வை குளிர்விக்க
பனியால் சூழ்ந்து
பனியாய் தழுவினான்...
என்னை மறந்துக் கிறங்கிய
ஒருபொழுதில்
மூடிக் கிடந்த விழி
மெல்ல திறக்க...
சட்டென்று
வந்த தடம் இன்றி
கரைந்து
காற்றில் கலந்து
மறைந்தே போனான்
அவன்...!
* * *
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (12)
நமது சந்திப்பு
ஒவ்வொன்றின் முடிவிலும்
பேசி
விடை பெறுகிறாய் நீ
விடை பெற்றும்
பேசிக்கொண்டிருக்கிறேன்
அதுவரை
உன்னிடம் சொல்லவியலாத
காதல் படிமங்களுடன்...!
* * *
நம்மிடையே
சம்பிரதாயமான விடைபெறுதல்
சாத்தியமில்லை
என்றா
ஒரு காற்றைப்போல செல்கிறாய்...
என்னவொன்று
காற்று தொட்டுச் செல்லும்
நீ விட்டுச் சென்றாய் !
* * *
விடைப் பெற்று நீ
சென்ற பின்னும்
பல முறை
திரும்பிப் பார்க்கிறேன்
பார்ப்பேன் என தெரிந்தே
போகாமல் இன்னும்
அங்கேயே
நின்றுக்கொண்டிருக்கிறது
உன் நிழல்...!
* * *
எப்படியாவது சொல்லிவிடுவாய்
என்றுதான்
நமது எல்லா சந்திப்புகளிலும்
எதிர்பார்க்கிறேன்...
விடைபெறுவாய்
எல்லாம் பேசியும்
என்னை பேசாமலும்...!
படம் -கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்